கல்வி அமைச்சின் உடனடி தீர்மானம்

எதிர்வரும் திங்கட்கிழமை அதாவது (07.03.2022) முதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அரசு சில மாறுதல்களுடன் கூடிய பாடசாலை நடைமுறையைக்கொண்டு வந்து பாடசாலை காலத்தை நடாத்தத்தீர்மானம் செய்துள்ளது.

அந்த வகையில், கொரோனா தீவிரக்காலத்தில் மேற்கொண்டது போல மீண்டும் மாணவர்களை குழுக்களாக பிரித்துப் பாடசாலைக்கு அழைப்பதாக கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, 20 மாணவர்களை உள்ளடக்கிய ஒரு வகுப்பானது தினமும் நடாத்தப்பட வேண்டும் என்றும், 21 முதல் 40 வரையில் மாணவர்களின் எண்ணிக்கை அளவினைக் கொண்ட வகுப்புகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு வாரங்களில் தனித்தனியாக மாணவர்கள் வகுப்புக்கு அழைக்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், 40 மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்புக்களிலுள்ள மாணவர்களை 3 சம பிரிவுகளாக பிரித்து வைத்துக்கொண்டு வகுப்புக்கள் தீர்மானிக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகளை மாணவர்களுக்கு முன்னெடுக்குமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பாடசாலைகளுக்கான தற்காலிக கல்வி அமைச்சின் உடனடி தீர்மான நடைமுறை அறிவித்தலானது அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் பொருந்தும் என கல்வியமைச்சு அறிவித்தல் கொடுத்துள்ளது.

தற்போதைய கொரோனா கொவிட்-19 நிலைவரத்தையும் தற்போதைய நாட்டில் நிலவும் ஸதிரமற்ற நிலமையும் கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நடவடிக்கைக்கு கையளிக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

Spread the love