எக்ஸ்-பிரஸ் பேர்ல் இழப்பீடு கொடுப்பனவுகளின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

2021 எக்ஸ்-பிரஸ் பேர்ல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு நீதியரசர்கள் முர்து பெர்னாண்டோ, ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நான்கு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தனது வாடிக்கையாளர்களான நீர்கொழும்பு மற்றும் சிலாபத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என நீதிமன்றில் அறிவித்தார். இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புல்லே, இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

நீதியரசர் முர்து பெர்னாண்டோ, எவ்வித தாமதமும் இன்றி இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றார். மேலும், மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அறிக்கையை செப்டெம்பர் 15ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த மனுக்களை ஒக்டோபர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் விசாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Spread the love