36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் ‘எல்விஎம்3′ ரொக்கெட்

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ ) மிகப்பெரிய ராக்கெட்டான ‘எல்வி எம் 3’ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த ‘ஒன்வெப்’  நிறுவனம் இணையப் பயன்பாட்டுக்கான செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனம் தற்போது அரசு, கல்வி, வர்த்தகம் தொடர்பான பயன்பாட்டுக்காக 36 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டு அந்த செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் பணியை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவிடம் ஒப்படைத்தது. இந்த 36 செயற்கைக்கோள்களும் நேற்று (ஞாயிறு) அதிகாலை 12.07 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ஏவுதளத்திலிருந்து ‘எல் விஎம்3’ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இது 43.5 மீற்றர் நீளமும் 640 தொன் எடையும் கொண்டது.

இந்த ரொக்கெட் இதுவரையில் அரசு செயல்பாடுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது முதன் முறையாக வணிகச் செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. விண்ணில் ஏவப்பட்ட 19 நிமிடத்தில் 36 செயற்கைக்கோள்களும்வெற்றிகரமாக திட்டமிடப்பட்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

முன்னதாக, 36 செயற்கைக்கோள் களும் வெற்றிகரமாக விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க பணி. பிரதமர் மோடியின் ஆதரவால் இது சாத்தியமானது. எல்.வி.எம்3 வணிகச் சந்தைக்குள் வர வேண்டும் என்று அவர் விரும்பினார். நமது ரொக்கெட்களை பயன்படுத்தி வணிகக்களத்தை ஆராய்வதற்கு விரிவாக்குவதற்கு அவர் அளித்த ஆதரவு முக்கியமானது. நாங்கள் ஏற்கனவே (தீபாவளி) கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டோம். சந்திரயான்-3 கிட்டத்தட்ட தயாராகிவிட்டது.
இறுதி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை கிட்டத்தட்ட முடிந்தது. இன்னும் சில சோதனைகள் நிலுவையில் உள்ளன. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சந்திரயான்-3 விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

Spread the love