வாழ்க்கை செலவீனம் உயர்வு: அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை

2016ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க முணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் (04.10.2022) இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. வாழ்க்கை செலவீனம் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

உணவு பணவீக்கம் 80 சதவீதத்தினையும் கடந்துள்ளது. அண்மையில் இடைக்கால பாதீடு முன்வைக்கப்பட்ட போதிலும், அதில் எவ்வித ஒதுக்கீடுகளும் செய்யப்படவில்லை.


எனவே அதிகரித்துள்ள பணவீக்கத்திற்கு இணையான கொடுப்பனவு, அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையினை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love