மேலும் 15 இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

மேலும் 15 இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை மற்றும் காக்கைதீவு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே நேற்று(25) அதிகாலை தனுஷ்கோடிக்கு அருகேயுள்ள கோதண்டராமர் கோவில் கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.

நெடுந்தீவு கடற்கரையிலிருந்து படகினூடாக இவர்கள் தமிழகத்திற்கு சென்றுள்ளனர். இவர்களில் 09 மாத குழந்தையுடன் 05 குடும்பங்களை சேர்ந்த 15 பேர் அடங்குகின்றனர். தமிழகத்தை சென்றடைந்த இலங்கை அகதிகளை மண்டபம் கரையோர காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கமுடியாத காரணத்தினால் படகு மூலம் தமிழகத்தை வந்தடைந்ததாக இவர்கள் கூறியுள்ளனர். விசாரணைகளின் பின்னர் நேற்று(25) அதிகாலை தமிழகத்தை சென்றடைந்த 15 அகதிகளும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதியிலிருந்து இதுவரை 75 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love