முன்னாள் ஜனாதிபதிக்கு சிங்கப்பூர் குறுகிய கால அனுமதி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூருக்கு வந்ததாகவும் அவருக்கு குறுகிய கால பயண அனுமதி மட்டுமே வழங்கப்பட்டது என சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் அதிகார சபை நேற்று தெரிவித்துள்ளது. ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் அதிகார சபை, இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு பொதுவாக 30 நாட்களுக்கு விசா வழங்கப்படும் என கூறியுள்ளது.

30 நாட்களுக்கு மேல் சிங்கப்பூரில் தங்கி இருக்க விரும்புவோர் விசா நீடிப்புக்கான விண்ணப்பத்தை இணையத்தளம் வழியாக மேற்கொள்ள முடியும். விண்ணப்பங்களை ஆராய்ந்து, அதனடிப்படையில் மேலதிக காலம் தங்கி இருக்க விசா வழங்கப்படும் எனவும் அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை சுதந்திரத்திற்கு பின்னரான வரலாற்றில் எதிர்நோக்கியுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி பல மாதங்களாக நீடித்த நிலையில், ஏற்பட்ட மக்கள் எதிர்ப்புகள் காரணமாக கடந்த வாரம் சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார்.

அங்கிருந்த தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார். கடந்த 14 ஆம் திகதி சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்சவுக்கு 14 நாட்கள் தங்கியிருப்பதற்கான அனுமதி பாஸ் வழங்கப்பட்டது எனவும் சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதேவேளை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சிங்கப்பூரில் புகலிடம் கோரவில்லை எனவும் அவருக்கு அடைக்கலம் எதுவும் வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

Spread the love