தமிழக மீனவரை விடுவிக்க வேண்டி இராமேஸ்வரத்தில் போராட்டம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.


இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 800க்கும் மேற்பட்ட விசைப்படகில் 3500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கொண்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். வழக்கம் போல கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் 1 விசைப்படகையும் அதில் இருந்த மீனவர்கள் 12 பேரையும், அதேபோல மண்டபம் பகுதியை சேர்ந்த ஒரு விசைப்படகு மற்றும் 4 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து காரைநகர் மற்றும் முழங்காவில் கடற்படை முகாமிற்கு அழைத்துச்சென்று மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, ஊர்காவல்துறை மற்றும் கிளிநொச்சி நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தினர். வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரையும் வரும் ஏப்ரல் 7ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை தொடர்ந்து 16 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர், இலங்கை கடற்படையின் மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது நடவடிக்கை காரணமாக ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த 16 மீனவர்களையும் 2 விசைப் படகையும் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை இன்று முதல் தொடங்கியுள்ளனர்.


மேலும், மீனவர்களின் கோரிக்கையை மத்திய மாநில அரசுகளுக்கு எடுத்துக் கூறும் விதமாக நாளை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Spread the love