புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங் உறுதி

இலங்கையில் காணப்படும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID) மூலம் கடன் வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படும் என அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தெரிவித்தார்.

அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங்கிற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிற்கும் இடையில் நேற்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் (Victoria Nuland) இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பை நினைவுபடுத்தி தூதுவர் பாராட்டினார்.

அவ்வேளை அண்மைக்காலமாக இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருந்தமைக்கான காரணங்களை விளக்கிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தை அணுகப் போவதையும் அணுகும் விடயத்தில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் கூறி நின்றார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை பாராட்டிய திருமதி ஜூலி சங், இது நீண்டகால அடிப்படையில் இந்நாட்டுக்கு முக்கியமானதொரு தேவை ஆகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அவ்வேளை எந்தவித பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதும் பாதிப்புக்களுக்குள்ளாகும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன் முக்கிய சந்திப்பு நிகழ்வின் போது ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமெரிக்க தூதரகத்தின் பிரதித்தூதுவர் மார்ட்டின் கெலீ (Martin Kelly), அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் சூசன் வோல்கே (Susan Walke) ஆகியோரும் இச்சந்திப்பில் உடனிருந்தனர்.

Spread the love