பரீட்சைகள் திட்டமிட்டபடி நடக்கும்: பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு

கடதாசித்தாளுக்கான தட்டுப்பாடு காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான தவணைப் பரீட்சைகளை மீண்டும் நடாத்துவதற்கு மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

வினாத்தாள்களை அச்சிடுவதற்கு போதுமான கடதாசித்தாள்களை தற்போது பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்ற காரணத்தால் பரீட்சைகளை உரிய நேரசூசிக்கு அமைவாக நடாத்த முடியும் என மேல் மாகாண கல்விப்பணிப்பாளர் ஸ்ரீ லால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி மேல் மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் தவணைப் பரீட்சைகள் திட்டமிட்ட பரீட்சை நேர அட்டவணையின்படி மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக மேல்மாகாண கல்விப்பணிமனை சார்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், தரம் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள் இன்று (21) முதல் வழமை போன்று நடைபெறும் எனவும் கல்விப்பணிப்பாளர் ஸ்ரீ லால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.

Spread the love