கோடைகாலத்தில் சாப்பிட வேண்டிய காய்கறிகள்

கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிலும் அக்னி வெயில் வந்தால், உடலில் இருக்கும் நீர்ச்சத்துக்கள் எல்லாம் வெயிலால் உறிஞ்சப்பட்டு சோர்வு ஏற்படும். இந்த காலத்தில் தண்ணீர்ச்சத்து மட்டுமின்றி, உப்புச்சத்து குறைபாடும் ஏற்படும். அதனால் நாம் உண்ணும்  உணவிலும் காய்கறிகளிலும் நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதாக பார்த்து சாபிடுவது நல்லது. அத்தகைய காய்கறிகள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

சுரைக்காய்: சுரைக்காய் என்பது அதிக நீர்ச்சத்து கொண்ட, கோடை காலத்தில் விளையக் கூடிய காய். இந்த காயானது, உடலுக்கு ஏராளமான நன்மைகளை கொடுக்கக் கூடியதாகும்.  சுரைக்காயில் சுமார் 96 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. இதனால், நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், போதுமான நீர்ச்சத்து வழங்கி புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் இது உதவிகரமாக இருக்கிறது. இந்த காய்கறி உடல் வறட்சியை நீக்குவது மட்டுமின்றி, கண் பார்வையையும் கூர்மையாக்கும்.

வெள்ளரி: இதுவும் அதிக நீர்சத்து கொண்டது. வெள்ளரியை வெயில் நாட்களில் தினசரி சாப்பிடுவது உடலை டிஹைட்ரேட் ஆகாமல் தடுக்கிறது. மேலும் பளபளப்பான சருமத்தை பராமரிக்க, அசிடிட்டி ஏற்படாமல் தடுக்க வெள்ளரி உதவுகிறது.

தக்காளி : தக்காளியில் 93% தண்ணீர் மற்றும் லைகோபைன் என்னும் உடலை சுத்தம் செய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், இதனை வெயில் காலத்தில் அதிகம் சாப்பிட, முகம் பொலிவோடு இருப்பதோடு, வறட்சியின்றியும் இருக்கும். குறிப்பாக இதனை பச்சையாக சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படாமலும் இருக்கும்.

பூசணிக்காய்:  பூசணி வகைகளில் வெள்ளைப் பூசணியில் அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே கோடைகாலத்தில் அதிக அளவில், இந்த காய்கறியை சேர்த்து வந்தால், உடலை வறட்சியின்றி வைத்துக் கொள்ளலாம்.

குடைமிளகாய்: குடைமிளகாயில் 90 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளதால், அதனை கோடைகாலத்தில் அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலு இதில் வைட்டமின் சி, ஏ, கே மற்றும் இதர சத்துக்களான லூடின், பொட்டாசியம் போன்றவையும் அதிகம் உள்ளது.

கொத்தம்மல்லி கீரை: (Celery) இந்த கீரையை சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறைவதோடு, நீர்ச்சத்து இதில் அதிகம் உள்ளதால், கோடைக்காலத்தில் அதிகம் சாப்பிட்டால், உடலை வறட்சியின்றி வைப்பதோடு, குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும்.

முட்டைக்கோஸ் : முட்டைகோஸில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புவோர், அதனை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். செரிமானம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடுகளுக்கு மிகவும் உதவுகிறது.

Spread the love