கச்சதீவில் புரிந்துணர்வுப் பேச்சுவார்த்தை,,, இலங்கை-இந்திய கடற்றொழிலாளர்கள் சந்திப்பு!

கச்சதீவு புனிதஅந்தோனியார் ஆலய உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று 11ம்திகதி நல்லெண்ணச் சந்திப்பு ஒன்று கச்சதீவுக்கோவு கோவிலை அண்டிய பிரதேசத்தில் நடைபெற்றது.

இருநாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் நடுவில் புரிந்துணர்வினை ஏற்படுத்தும் முகமாக கடறவறொழில் நீரியல் வளத்துறை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுக்கு நடுவில் அவர்தம் கருத்துக்கூறலையும் பரஸ்பரம் தமக்கிடையேயான ஆதங்கங்களையும் வெளிப்படுத்துமுகமாக இவ் நல்லெண்ணச்சந்திப்பு நிகழ்த்தப்பட்டிருந்தது.

குறிப்பாக, அங்கு பேசப்பட்ட விடயப்பரப்பு யாதெனில் இந்தியக் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறையும் அதன் காரணமாக பாதிப்புக்குள்ளாகும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதார சிக்கல்களும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் என்பதீறாக இலங்கை வாழ் கடற்றொழிலாளர்கள் சார்பாக, வட மாகாண கடற்றொழிலாளர் சமேளனத்தின் தலைவர் அ. அன்னராசா உரையாற்றினார்.

மேலும் அவர் பேசுகையில் நம் இருநாட்டுத் தொப்புள் கொடி உறவிற்கு தடையாக இருக்கின்ற இழுவைமடி வலைத் தொழிலை உடனடியாக நிறுத்துமாறும் இந்தியக் கடற்றொழிலாளர்களை வினயமாகக் கேட்டுக் கொண்டதுடன், உள்ளூர் கடல் வளங்கள் பாதிப்புறாத வகையில் நாட்டுப் படகு போன்ற தொழில் முறைகளில் இந்தியக் கடற்றொழிலாளர்கள் ஈடுபடும் பட்சத்தில் நிபந்தனைகளுடன் வளங்களைப் பகிர்ந்து கொள்ள இலங்கை கடற்றொழிலாளர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்குப்பதில் கூறிய   இந்தியக் கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகள், இழுவைமடித் தொழிலால் வளங்கள் அழிக்கப்படுகின்றன என்பதை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்ததுடன், மாற்றுத் தொழில் முறைக்கு தம்மை தயார்ப்படுத்துவதற்கு கால அவகாசம் தேவை என்றும்  அதற்கான காலவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

மேலும், 2004 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 18 வருடகாலமாக இது பற்றிப்பேசப்பட்ட போதும் இன்று வரை பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு எட்டுப்படாமலும்   பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டிய இந்தியக் கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், விரைவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் குறுகிய காலத்தினை நிர்ணயம் செய்து, அந்தக் காலப் பகுதிகள் அனைத்து இந்திய இழுவைமடிப் படகுகளையும் மாற்றுத் தொழிலுக்கு தயார்படுத்துவதற்கு உறுதியான பொறிமுறை ஒன்றினை  உருவாக்குவது சாலச் சிறப்பானதாக இருக்கும் என்ற கருத்தினையும் முன்வைத்தனர்.

அப்போது பேசிய அங்கத்தவர்கள், தங்களின் படகுகள் ஏலத்தில் விற்கப்பட்டமையானது  தமக்கு பாரிய தாக்கத்தினையும் வேதனையையும்  ஏற்படுத்தியதாக இந்தியக் கடற்றொழிலாளர்களினால  கூறப்பட்ட  போதும்.

அதற்குப் பதில் அளித்த இலங்கை கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், பல்வேறு அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் வகையில் தரித்திருந்த இந்திய மீனவப் படகுகளை விற்பனை செய்து அந்தப் பணத்தை இந்தியக் கடற்றொழிலாளர்களினால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதரத்தை இழந்து நிற்கும் உள்ளூர்  கடற்றொழிலாளர்களுக்கு வழங்குமாறு கடற்றொழில் அமைச்சருக்கு தொடர்ச்சியாக தங்களால்  வழங்கப்பட்ட  அழுத்தம் காரணமாகவே குறித்த நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டதாக இலங்கைத்தொழிலாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு இரண்டு நாட்டு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளும் தமது ஆதங்கங்களை வெளியிட்ட நிலையில்  தமது கருத்தைத் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்றைய சிநேகிதபூர்வமான சந்திப்பில் இரண்டு தரப்பினரும் தங்களது எதிர்பார்ப்புக்களையும் ஆதங்கங்களையும் வெளியிட்டுள்ளமை ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தியிருக்கும் என்று நம்புவதாகவும், விரைவில் இந்திய வெளிவிகார அமைச்சர் டாக்டர் திரு.ஜெயசங்கர் அவர்கள் இலங்கை வரவுள்ள நிலையில் அவருடனான சந்திப்பின்போது, கடற்றொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, உறவுகளை பாதிக்காத வகையில் தீர்வொன்றை எட்டுவது தொடர்பாக கலந்துரையாடப்படும் என்று தெரிவித்தார்.

அதேபோன்று, இந்தியக் கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், இலங்கை கடற்றொழிலாளர்களின் ஆதங்கத்தினை ஏனைய கடற்றொழிலாளர்களுக்கும், இந்திய மற்றும் தமிழக தலைவர்களுக்கும் எடுத்துரைத்து விரைவில் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தது

Spread the love