ஆசிய அபிவிருத்தி வங்கியின் உறுதிமொழி, கோட்டபாய முன்னிலையில்

ஆசிய அபிவிருத்தி வங்கியானதின் ஒத்துழைப்புடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள், குறிப்பிடத்தக்களவில் முன்னேற்றம் கண்டுள்ளது எனக்கூறிய அதன் தலைவர் மசட்சுகு அசகாவா (Masatsugu Asakawa), இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் 10 ம்திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே தலைவர் மசட்சுகு அசகாவா இவ்வாறு தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தனியார் துறையின் ஆர்வமுடன் தொழிற்படும் தொழில் முனைவோரது வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் தம்மால் விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி, கடந்த வருடம் இலங்கைக்கு 750 மில்லியன் டொலர் சலுகைக் கடன்களை வழங்கியிருந்தது . இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் புதிய திட்டங்கள் அடங்கலாக 02 பில்லியன் டொலர் கடன் உதவித்தொகை ஒதுக்கப்படும் என்று மசட்சுகு அசகாவா குறிப்பிட்டார்.

கொவிட் 19 தொற்றுப்பரவல் காரணமாகவும்  பின்னடைவைச் சந்தித்த இலங்கையின் சுற்றுலாத் துறையினை மேம்படுத்துவதற்கும் , மனித வள அபிவிருத்திக்கும் தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார். இலங்கைக்கு கிட்டத்தட்ட 600 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்கள் மற்றும் நிதி உதவிகளை அந் நிறுவனம் வழங்கியதாகவும் அதற்காக  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு தனது நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.

பசுமை விவசாயம், புதுப்பிக்கத்தக்க மீள் சுழற்சி  வலுசக்தி உற்பத்தி மற்றும் கைத்தொழில் வலயங்களில் நேரடியான வெளிநாட்டு முதலீட்டுடாளர்களின் பங்களிப்பு என்பனவற்றுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

மொத்த வலுசக்தி உற்பத்தியில் 70 சதவீதங்களைப் மீள் புத்தாக்க  மூலங்களிலிருந்து பெறுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டு செயற்படுகிறது. இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பினை  வழங்குமாறு ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55ஆவது வருடாந்த மாநாடு, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. இதற்காக இலங்கையைத் தெரிவு செய்திருந்தமை  தொடர்பில் தனது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதாக  ஜனாதிபதி தெரிவித்ததுடன், அதனைச் சிறப்பாக நடத்துவதற்கு தம்மாலான பூரண  ஒத்துழைப்பினை நல்குவதாக  ஜனாதிபதியவர்கள் தெரிவித்தார்.

Spread the love