எல்பிஎல் போட்டி இன்று தொடங்குகிறது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் சிலோன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் நான்காம் கட்ட போட்டிகள் 30/07/2023 முதல் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் முதலாவது போட்டி கடந்த சீசனில் சம்பியனான யாழ் கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது. 24 போட்டிகள் கொண்ட சிலோன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 20ம் திகதி வரை நடைபெற உள்ளது.

யாழ் கிங்ஸ், கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ், தம்புள்ளை அவுரா, கோல் டைட்டன்ஸ், பீ லவ் கண்டி ஆகிய 5 அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. 12 ஆரம்ப சுற்று போட்டிகள் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்திலும், 8 ஆரம்ப சுற்று போட்டிகள் பல்லேகல மைதானத்திலும் நடைபெற உள்ளன . இறுதி மூன்று போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற உள்ளது.

இவ்வருட சம்பியனுக்கான வெற்றிக்கிண்ணம் நேற்று கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டதுடன், இவ்வருட சம்பியனுக்கு வழங்கப்படும் எல்.பி.எல் கிண்ணம் மீள்சுழற்சி செய்யப்பட்ட அலுமினிய கேன்களினால் தயாரிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். மறுசுழற்சி முறையில் கிரிக்கெட் கோப்பை உருவாக்கப்படுவது இதுவே முதல் முறை. எல்பிஎல் போட்டியின் பிரமாண்ட ஆரம்ப விழா இன்று மாலை 5.30 மணிக்கு கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Spread the love