இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க மோடி தயார்! – பா.ஜ.க. தமிழகத் தலைவர்

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது. அன்று அனுமான் எப்படி சஞ்சீவி மலையை சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தயாராகவே இருக்கின்றார் என்று இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாக்கட்சியின் தமிழக தலைவரான அண்ணாமலை தெரிவித்தார்.

இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வு கொட்டகலை சி.எல். எவ்.வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இலங்கை அருகிலுள்ள நாடு, எமது சொந்தங்கள் வாழும் நாடு என இருகோணத்தில் இந்தியா பார்க்கின்றது. அதனால்தான் நெருக்கடியான கட்டங்களில் உதவிகள் வழங்கப்படுகின்றன. உயிர்காப்பு மருந்து தேவை என்று சொன்னபோது, 107 வகையான 760 கிலோ மருந்துகளை அனுப்பி வைத்துள்ளோம். எதிர்காலத்திலும் உதவுவோம். மலையக மக்களுக்கான உதவிகளும் தொடரும். நாம் வளரும் அதேவேளை, எமது தொப்புள்கொடி உறவுகளையும் வளரவைப்போம். மலையகம் கல்வியால் உயரவேண்டும். அதற்கான உதவிகளும் தொடரும். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, நீண்டகாலத்துக்கானது அல்ல. விரைவில் நிலைமை மாறவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்றார்.

Spread the love