13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயார்: ரெலோ

“13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற ரெலோ, ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏன் புறக்கணித்தார்கள் என்பது கேள்விக்குறியே! அவ்வாறு அவர்கள் ஜனாதிபதியின் சந்திப்பைப் புறக்கணித்தார்கள் எனின் அவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வானது வெளியேற வேண்டும்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியுடனான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சந்திப்பு நடைபெற்ற போதும் சரி இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு தொடர்பில் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் பேசப்படவில்லை, என்பது ஊடகங்கள் மூலம் உறுதியாகின்றது.

அதேசமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தரப்பிலிருந்து 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான அழுத்தங்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டன என்கிற தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டன. இது சம்பந்தமாக நாம் தெரிவித்து வந்த கருத்துக்களானதை மீண்டும் மீண்டும் உறுதியாவதாகவே நாம் கருதி வருகிறோம்.

கடந்த காலங்களில் புலம்பெயர் தமிழர்களை தடை செய்த இவ்வரசானது தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டபோது அந்த புலம்பெயர்ந்த மக்களின் முதலீடுகளை பயன்படுத்த நடவடிக்கை எடுத்து நிற்கிறது. மேலும் இந்த பொருளாதார பலம் குறை்துள்ள நேரத்தில் அரசானது புலம்பெயர் தமிழர்கள் மீதான தடையை நீக்குவதற்கு கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி உள்ளது. இது எதை காட்டுகிறது என்றால் தடை என்பது இலங்கை அரசாங்கத்தினுடைய தேசிய பாதுகாப்பு சம்பந்தமான விடயம் அல்ல என்பதையே காட்டி நிற்கிறது  எனலாம் என்றார்.

Spread the love