வரலாற்றில் எப்போதும் சந்தித்திராத மிகமோசமான நிலைமையை எதிர்கொள்ளப்போகிறோம்!

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. திறைசேரியால் ஒரு மில்லியன் டொலரைக்கூட தேடிக்கொள்ள முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இப்போதுள்ளதை விட அடுத்த ஒரு சில மாதங்கள் மிக மோசமானதாக இருக்கும். பயங்கரமான சவாலையே நான் பொறுப்பேற்கின்றேன். கத்திமேல் நடப்பதை விடவும் இது பயங்கரமானது. எனினும், உயிரைப் பணயம் வைத்தேனும் போராடுவேன். நெருக்கடிக்குள் இருந்து நாட்டை மீட்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் – இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார். நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையிலேயே அவர் மேறகண்டவாறு கூறினார்.

நாட்டின் தற்போதைய நிலைமையின் உண்மைத் தன்மையை பிரதமர் வெளியிட்டதுடன், எதிர்காலத்தில் ஏற்படும் சவால்கள் குறித்தும் விவரித்தார். அவரது உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

வருமான எதிர்வுகூறலில் பிழை

பிரதமர் பதவியை நான் கேட்டுப் பெறவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையைக் கருத்திற் கொண்டு இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார். நான் அரசியல் தலைவராக மட்டுமன்றி இலவசக் கல்வியை அனுபவித்து கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டத்துறையில் பட்டம் பெற்று உயர்ந்த தேசியத் தலைவர் என்ற வகையிலே இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. 2022க்கு ஆரம்பத்தில் கடந்த அரசின் வரவு – செலவுத்திட்டத்தில் 2.3 ட்ரில்லியன் ரூபா வருமானமாக உள்ளன எனக்குறிப்பிடப்பட்டிருந்தாலும், இந்த வருடத்துக்கான உண்மையான வருமான எதிர்வுகூறல் 1.6 ட்ரில்லியன் ரூபாவாக உள்ளது.

செலவு அதிகரிப்பு

2022ஆம் ஆண்டுக்கான அரசின் செலவு 3.3 ட்ரில்லியன் ரூபா. எனினும், கடந்த அரசில் வட்டி விகிதம் அதிகரித்தமை மற்றும் மேலதிக செலவுகள் காரணமாக 2022ஆம் ஆண்டுக்கான அரசின் மொத்தச்செலவு 4 ட்ரில்லியன் ரூபா. வருடத்துக்கான வரவு – செலவு பற்றாக்குறை 2.4 ட்ரில்லியன் ரூபாவாக உள்ள அதேவேளை அது சராசரி தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 13 வீதமாகும். அதேபோன்று அங்கீகரிக்கப்பட்ட கடன் எல்லை 3 ஆயிரத்து 200 பில்லியன் ரூபா. நாம் மே மாதத்தின் இரண்டாம் வாரம் ஆகும் போது ஆயிரத்து 950 மில்லியன் ரூபாவை செலவு செய்திருந்தோம். அதன்படி அண்ணளவான மிகுதி ஆயிரத்து 250 மில்லியன் ரூபா. அமைச்சரவையில் திறைசேரி முறிகளை வழங்கும் அனுமதிக்கப்பட்ட எல்லையை 3 ஆயிரம் பில்லியனில் இருந்து 4 ஆயிரம் பில்லியன் வரை அதிகரிக்கும் யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைக்க தீர்மானத்தை எடுத்தோம்.

திறைசேரியில் பணம் இல்லை

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 7.5 பில்லியன் அமெரிக்க டொலர், ஆனால் இன்று திறைசேரியால் ஒரு மில்லியன் டொலரைக்கூட தேடிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எரிவாயுவை கப்பலில் ஏற்றும் பொருட்டு செலுத்தத் தேவையான 5 மில்லியன் அமெரிக்க டொலரைக்கூட இந்த நேரத்தில் நிதியமைச்சால் தேடிக்கொடுக்கமுடியாதுள்ளது. இவ்வனைத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் நாம் முகம் கொடுக்கும் மிகமோசமான சில சிக்கல்கள் உள்ளன. எதிர்வரும் சில நாள்களில் வரிசைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு மிகவிரைவில் சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலரைத் தேடவேண்டி உள்ளது. இப்போது நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெற்றோல் மட்டுமே உள்ளது. நேற்று வந்த டீசல் கப்பலால் இன்றிலிருந்து உங்களின் டீசல் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும். இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் மே 19 மற்றும் ஜூன் 1 ஆகிய திகதிகளில் மேலும் இரண்டு டீசல் கப்பல்களும் மே 18 மற்றும் மே 29 இரண்டு பெற்றோல் கப்பல்கள் வரவுள்ளன. இன்றுவரை 40 நாள்களுக்கு மேலாக இலங்கையின் கடற்பரப்பில் பெற்றோல், மசகு எண்ணெய், ஏற்றிவந்த 3 கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு செலுத்தும் பொருட்டு திறந்த சந்தையில் டொலரைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

15 மணிநேர மின்வெட்டு

மின்சாரத்தேவையில் நான்கில் ஒன்றை உற்பத்தி செய்ய எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாளாந்த மின்வெட்டு இன்னும் சில நாள்களில் 15 மணித்தியாலங்களாக மாறவும் இடமுண்டு. ஆனால், நாம் இதற்கு தேவையான நிதியை தேடிக்கொண்டுள்ளோம். அதேபோன்று முடிந்தளவு நுகர்வோருக்கு எரிவாயுவை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு 20 மில்லியன் அமெரிக்க டொலரைக்கூடிய விரைவில் தேடவேண்டும். மண்ணெண்ணெய் சம்பந்தமான நிலைமை இதனை விடப் பயங்கரமானது. இந்த நேரம் வரை இலங்கை மத்திய வங்கி, அரச வங்கிகள், தனியார் வங்கிகள், இலங்கையில் உள்ள வெளிநாட்டு வங்கிகள் அனைத்தும் டொலர் இல்லாத சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளன. நம்மிடம் கையிருப்பில் உள்ள டொலரின் அளவு மிகவும் சிறியது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

14 அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடும்

இதற்கிடையில், மற்றுமொரு உதாரணம் மருத்துவ மருந்துகளுக்குத் தட்டுப்பாடு. இருதய நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், சத்திர சிகிச்சைக்குத் தேவையான சிகிச்சை உபகரணங்கள் உள்பட பல மருத்துவ மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. மருத்துவ மருந்துகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் மற்றும் தேவையான உணவுகளை வழங்கும் வழங்குநர்களுக்கு 4 மாதங்களாக கட்டணம் செலுத்தப்படவில்லை . அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 34 பில்லியன் ரூபா. அதேபோன்று அரச ஔடத கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்த மருத்துவ மருந்துகளுக்கு 4 மாதங்களாகக் கட்டணம் செலுத்தப்படவில்லை . அதனால் அவர்களை கறுப்புப்பட்டியலில் சேர்க்க வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றன.

14 அத்தியாவசிய மருத்துவ மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளமையும், அதில் இரண்டையாவது வழங்க இந்த நேரத்தில் எமது மருத்துவ வழங்கல் பிரிவுக்கு இயலாது உள்ளமை மிகவும் வருந்தத்தக்க விடயமாக உள்ளது. இருதய நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து மற்றும் விசர் நாய்க்கடி எதிர்ப்பு மருந்து ஆகியவையே அந்த இரண்டு மருந்துகளாகும். ஆனால் விசர் நாய்கடி எதிர்ப்பு மருந்துக்கு மாற்று மருந்து எதுவும் இல்லை. இதற்கிடையில் 2022 ஆண்டுக்காக முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி வரவு – செலவு திட்டத்துக்குப் பதிலாக புதிய வரவு ‘- செலவுத் திட்டமொன்றை முன்வைக்கதிட்டமிடப்பட்டுள்ளது.

எரிபொருள் விற்பனை நஷ்டம்

குறுகிய காலத்துக்குள் நாம் இதனை விட மோசமான காலத்துக்கு முகம் கொடுக்கப்போகின்றோம். பணவீக்கம் மேலும் அதிகரிக்க இடமுள்ளது. அரசு தற்போது 92 பெற்றோல் லீற்றர் ஒன்றில் ரூ.843,895 பெற்றோல் லீற்றர் ஒன்றில் ரூ.71.19 டீசல் லீற்றர் ஒன்றில் ரூ.131.55, சுப்பர் டீசல் லீற்றம் ஒன்றில் ரூ.136.31 மற்றும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றில் ரூ. 294.5 என நட்டம் ஏற்படுகின்றது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் இந்த நஷ்டத்தை மேலும் தாங்கிக்கொள்ளமுடியாது. அதேபோல இலங்கை மின்சாரசபை மின் அலகு ஒன்றுக்காக உங்களிடம் ரூ.17 அறவிட்டாலும் அதன் பொருட்டு 48 ரூபா வரை செலவு செய்கிறது. அதன்படி ஒரு அலகுக்கு 30 ரூபா நஷ்டம் ஏற்படுகிறது.

பணம் அச்சடிப்பு

நான் இந்தநேரத்தில் விருப்பப்படாவிட்டாலும் பணத்தை அச்சடிப்பதற்கு அனுமதி வழங்க நேரிடும். அரச ஊழியர்களின் இந்த மாத சம்பளத்தை வழங்கவும், உங்களுக்குத் தேவையான பொருள்கள் சேவைகளின் பொருட்டே அதனைச் செய்யவுள்ளது. ஆயினும் பணத்தை அச்சடிப்பதால் ரூபாவின் பெறுமதி குறையும் என்பதை நாம் நினைவில் வைக்கவேண்டும். தற்போதைய நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சாரசபைக்குத் தேவையான நிதியைக்கூட தேடமுடியாதுள்ளது. ஆயினும் எதிர்வரும் சில மாதங்களுக்கு நீங்களும் நானும் வாழ்க்கையில் மோசமான காலக்கட்டத்தை கடக்க நேரிடும். அதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் முகம் கொடுக்க வேண்டும்.

நெருக்கடியான கட்டத்தில் உள்ளோம்

நான் மக்களுக்கு விடயங்களை மறைத்து பொய் சொல்வதற்கு எந்தவகையிலும் விரும்பவில்லை. பயங்கரமாக இருந்தாலும் அசிங்கமாக இருந்தாலும் இது ‘தான் உண்மையான நிலைமை. குறுகிய காலத்துக்கு நாம் கடந்த காலத்தை விட மிகவும் கஷ்டமான காலத்துக்கு முகம் கொடுக்கப்போகின்றோம். இந்த நேரத்தில் நமக்கு கவலைப்பட மட்டுமே முடியும். ஆனால் இது குறுகிய காலத்துக்கு மட்டுமே. எதிர்வரும் சில மாதங்களில் எமது நட்பு நாடுகளின் உதவிகள் மற்றும் ஒத்துழைப்பு எமக்கு கிடைக்கும். அவர்கள் எமக்கு உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர். அதன் பொருட்டு எதிர்வரும் சில மாதங்கள் நாம் பொறுமையுடன் இருக்கவேண்டும். ஆனால் இதில் இருந்து நாம் மீளமுடியும் அதன்பொருட்டு நாம் புதிய வழிக்குச் செல்ல நேரிடும்.

தேசிய சபை

தற்போது நிலவும் இந்தச் சிக்கல்களுக்கு தீர்வு காணும் பொருட்டு தேசிய சபை அல்லது அரசியல் சபை ஒன்றை அனைத்துக் கட்சிகளினதும் பங்கேற்புடன் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது. அதன் மூலம் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து எட்டப்படும் தீர்மானத்துக்கு அமைய நிச்சயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் பொதுவான குறுகிய காலமத்தியக்கால – மற்றும் நீண்ட கால செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை மீண்டும் உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்ல எம்மால் முடியும். மண்ணெண்ணெய், எரிவாயு, எரிபொருள் வரிசை இல்லாத நாடு, மின்சாரம் துண்டிக்கப்படாத நாட்டை, விவசாயத்தை சுதந்திரமாக மேற்கொள்ளக்கூடிய வசதிகள் உள்ள நாட்டை, இளைஞர், யுவதிகளின் நாளையதினம் பாதுகாக்கப்பட்ட நாட்டை, மனித வளம் போராட்டக்களத்தில் மற்றும் வரிசையில் வீணடிக்கத் தேவை இல்லாத நாட்டை, எல்லோரும் சுதந்திரமாக வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லக் கூடிய நாட்டை, மூன்று வேளையும் உணவு உண்ணக் கூடிய நாட்டை நாம் கட்டியெழுப்புவோம் – என்றார்.

Spread the love