வடக்கு – தமிழக மீனவர்களை மோதவைப்பதற்கான நகர்வுகள்? நிர்மலநாதன் கேள்வி

வடக்கு மற்றும் தமிழக மீனவர்களை மோதவைப்பதற்கான இராஜதந்திர நகர்வுகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்டுகின்றனவா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையில் கேள்வி எழுப்பியுள்ளது.


நேற்று (புதன்கிழமை) இடம் பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்தக் கேள்வியை கடற்தொழில் அமைச்சரிடம் வினவினார். இந்திய இழுவைப்படகுப் பிரச்சினைக்கு இரு மாதங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் கூறியிருந்தார்.


அவரது இந்தக் கருத்தை சுட்டிக்காட்டிய சார்ள்ஸ் நிர்மலநாதன், கடலுக்கு செல்பவர்கள் மரணிக்கும் சம்பவங்கள் தற்போதும் இடம் பெறுகின்றன என ஆதங்கம் வெளியிட்டார். அத்தோடு இதனை கண்டுகொள்ளாமல் பிரச்சினைக்கு தீர்வைக் காணாமல் இருப்பது இருதரப்பையும் மோதவைக்கும் இராஜதந்திர முயற்சியா என்றும் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜதந்திர நடவடிக்கை என்ற கருத்து அரசியல் உள்நோக்கத்தோடு எழுப்பப்பட்டது என சாடினார். கடந்த 5 வருட ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என குற்றம் சுமத்திய அமைச்சர் விரைவில் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் உறுதியளித்தார்.

Spread the love