வடக்கில் சிவிலுடையில் சீன இராணுவத்தினர்! -தமிழ்நாடு புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை


இலங்கையின் வடக்கில் கடலட்டை வளர்ப்பை தொடங்குவதற்கு சீன இராணுவம் அதிநவீன சாதனங்களை பயன்படுத்துகின்றது என தமிழ்நாடு புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர். இலங்கையில் சீன இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து தமிழ்நாடு கரிசனை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மாநில புலனாய்வு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அயல்நாட்டில் சீனாவின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ள மாநில புலனாய்வு பிரிவு கரையோர பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. சீன இராணுவத்தினரின் நடமாட்டம் செய்மதிகள் போன்ற உயர் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்பாடு இலங்கையின் வடபகுதியில் ஆளில்லா விமானங்கள் ஏனைய சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றமை போன்றவற்றினால் தமிழ்நாட்டின் கரையோர பகுதிகளில் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் அவசியம் என மாநில புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர். அனைத்து நகரங்கள், மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடலட்டை வளர்ப்பை தொடங்குவதற்கு சீன இராணுவம் அதி நவீன சாதனங்களை பயன்படுத்துகின்றது என தமிழ்நாடு புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சியொன்றின் உறுப்பினர்களின் உதவியுடன் சீன இராணுவத்தைச் சேர்ந்த சிலர் இரகசியமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளனர் என சில நாட்களிற்கு முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. தமிழ்நாடு எல்லை பாதுகாப்பு குழு மத்திய புலனாய்வு பணியகத்தை மேற்கோள்காட்டி செய்மதிகள் ரொக்கட்கள் கண்டங்களிற்கு இடையிலான செய்மதிகள் போன்றவற்றை கண்காணிப்பதற்கான சீனா கப்பலின் அம்பாந்தோட்டை விஜயம் குறித்து எச்சரித்திருந்ததுடன் தமிழ்நாட்டில் அணுசக்தி நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளதால் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என தெரிவித்திருந்தது. முல்லைத்தீவு, அனலைதீவு, மீசாலை, சாவகச்சேரி உட்பட வடக்கின் பல பகுதிகளிற்கான சீன பிரஜைகளின் நடமாட்டம் தமிழ் மீனவர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் ஒரேயொரு வாழ்வாதாரத்திற்கான வழியாக காணப்படுகின்ற கடல்வளத்தை சீனர்கள் பயன்படுத்து கின்றனர்என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போதைய நிலை இலங்கை மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தலாம் வடக்கு-கிழக்கு பகுதியில் இந்தியாவின் செல்வாக்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர் என புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர். ஆகஸ்ட் 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீனாவின் யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சி கப்பல் வருகையை தொடர்ந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை காரணமாக தமிழ்நாடு தனது தென்கிழக்கு கரையோர பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இந்த கப்பல் விண்வெளி – செய்மதி கண்காணிப்பு திறன்கொண்டதாகவும் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகளை ஏவக்கூடிய திறன் கொண்டதாகவும் காணப்பட்டது. இதன் காரணமாக தனது 1076 கிலோமீற்றர் கரை யோரப்பகுதியில் உள்ள முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளிற்கான பாதுகாப்பை தமிழ்நாடு அதிகரித்திருந்தது.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன கப்பல் வருவதற்கான அனுமதியை இலங்கை வழங்கியதும் இது குறித்து இந்தியா கவலை வெளியிட்டிருந்தது. தனது பாதுகாப்பு பொருளாதார நலன்களில் தாக்கத்தை செலுத்தக்கூடிய விடயங்கள் குறித்து உன்னிப்பாக அவதானிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது. சீன பிரஜைகள் இலங்கையில் பிரசன்னமாகியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் நாயகம் இலங்கையில் சீன பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என்பது சர்ச்சைக்குரிய உண்மை என தெரிவித்துள்ளார். இலங்கை-இந்திய சர்வதேச கடல்பரப்பிற்கு அருகில் உள்ள பகுதிகளிற்கு சீனத் தூதுவர் அடிக்கடி விஜயம் மேற்கொள்வது கடலட்டை பண்ணைகள் என்ற பெயரில் ஆளில் லாத விமானத்தை பயன்படுத்தி ஆய்வு செய்வது போன்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.


இந்தியாவில் பல்கலைக்கழககல்வியை தொடர்வதற்கு இலங்கை மாணவர்களிற்கு இந்தியா புலமைப்பரிசில்களை வழங்குகின்ற அதேவேளை சீனா தனது நாட்டில் பட்டப்பின்படிப்பை தொடரும் மாணவர்களிற்கு நிதியை வழங்குகின்றது சீனா தனது எதிர்கால திட்டத்திற்காக இலங்கை இளைஞர்களை கவரமுயல்கின்றது என்பது வெளிப்படை என அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் கடல்சார் இயக்குநராகவும் பணியாற்றும் மிட்டல் இந்திய கடல்பரப்பிற்குள் சீன நாட்டவர்கள் மாத்திரம் ஊடுருவார்கள் என்ற உத்தர வாதமில்லை . சீனா தனது நடவடிக்கைகளிற்காக பயிற்சி வழங்கிய எவரும் தென்கிழக்கு இந்திய கடற்பரப்பிற்குள் நுழையலாம் என தெரிவித்துள்ள அவர் தமிழ்நாடு புலனாய்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் கரையோரங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறும் தனது அனைத்து கரையோர மாவட்டங்களிற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரித்து வரும் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு கடற்கரையோரத்தில் முக்கிய பகுதிகளில் நிறுத்துவதற்காக உருவாக்குவதற்கு தமிழ்நாட்டிற்கு மத்திய அரசாங்கம் உதவவேண்டும் என சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு என அனுமதிக்கப்பட்ட 800 பேரில் 50 வீதமானவர்களிற்கான வெற்றிடம் உள்ளது. தற்போது பணியில் இருப்பவர்கள் 42 பொலிஸ் நிலையங்களில் பணிபுரிகின்றனர் குறைந்தளவு ஆள்பலத்துடன் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு அரசாங்கம் ஏற்கனவே இராமேஸ்வரம் அருகே 240 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியிருந்தாலும் பிராந்திய கடல்சார் கடலோர பாதுகாப்பு பயிற்சி கல்லூரியை ஆரம்பிப்பதற்கு மத்திய அரசாங்கம் இன்னமும் அனுமதி வழங்கவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Spread the love