ராஜஸ்தான், மும்பை அணிகளின் வீரர்கள் இணைந்து ஷேன் வோர்னுக்கு கௌரவ அஞ்சலி 

அண்மையில் மரணமடைந்த அவுஸ்திரேலியாவின் முன்னாள் சுழல்பந்து வீச்சு மன்னன் ஷேன் வோர்னுக்கு ராஜஸ்தான் றோயல்ஸ், மும்பை இண்டியன்ஸ் ஆகிய இரு அணிகளினதும் வீரர்களும் போட்டி மத்தியஸ்தர்களும் கௌரவஞ்சலி செலுத்தினர். ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கும், மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் இடையில் மும்பை டிவை பட்டில் விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் மறைந்த ஷேன் வோர்னுக்கு ஒரு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்கப்பட்டு கௌரவஞ்சலி செலுத்தப்பட்டது. தாய்லாந்தின் கோஹ் சமுய் தாய் ரிசோர்ட் ஹொட்டெல் ஒன்றில் கடந்த மாதம் தங்கியிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு ஷேன் வோர்ன் தனது 52 ஆவது வயதில் காலமானார். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை 3 விக்கெட்களால் வெற்றிகொண்டு சம்பியனான ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு ஷேன் வோர்ன் தலைமை தாங்கியதுடன் அணி பயிற்றுநராகவும் செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love