மேரி கோம் முக்கிய போட்டிகளில் இருந்து விலகல்

இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் வெண்கலபதக்கம் வென்று கொடுத்த குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் முக்கிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

சர்வதேச குத்துச்சண்டை அசோசியேசன் வரவிருக்கும் குத்துச்சண்டை போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி மே மாதம் 6 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி துருக்கி இஸ்தான்புல்லில் உலக பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. 2022 காமன்வெல்த் போட்டி ஜூலை 28 ஆம் திகதி தொடங்குகிறது. ஆசிய போட்டிகள் செப்ரெம்பர் 10 ஆம் திகதி தொடங்குகிறது. இந்த நிலையில் ஆறு முறை உலக சம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம், உலக குத்துச் சண்டை சம்பியன்ஷிப், ஆகிய போட்டிகளில் பங்கேற்பதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேரி கோம், கூறுகையில் நான் இந்த போட்டிகளில் இருந்து விலகி இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு வழங்க விரும்புகிறேன். பெரிய தொடர்களில் அவர்களுடைய திறமையை வெளிப்படுத்த இது வாய்ப்பாக அமையும். நான் காமன்வெல்த் – போட்டிக்கு மட்டும் தயாராக கவனம் செலுத்த இருக்கிறேன் என்றார். 12 பிரிவுகளுக்கான உலக சாம்பியன்சிப் போட்டிகளுக்கான தகுதி சுற்றுகள் வருகிற திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை நடைபெறுகிறது. ஆசிய போட்டிக்கான தகுதிச்சுற்றுகளும் இதில் அடங்கும். 51 கிலோ மற்றும் 69 கிலோ எடை பிரிவில் ஆசிய போட்டிக்கான தகுதிச் சுற்று மார்ச் 11 ஆம் திகதி முதல் மார்ச் 14 ஆம் திகதிவரை நடைபெறும் என இந்திய குத்துச்சண்டை பெடரேசன் தெரிவித்துள்ளது.

Spread the love