மத்திய கிழக்கு நாடுகளுக்கான சுற்றுலா வீசா இடைநிறுத்தம்

சுற்றுலா வீசா ஊடாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்த வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார,வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் சுற்றுலா வீசா ஊடாக ஓமான் நாட்டுக்கு சென்ற பெண்கள் தொடர்பில் பணிய கத்தினால் பொறுப்பேற்க முடியாது எனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இலங்கை பணிப்பெண்கள் ஓமான் நாட்டில் பகிரங்க ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார மேலும் கூறுகையில்,
ஓமான் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண்கள் சுற்றுலா வீசா ஊடாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல்,முறையான வழிமுறைகளை பிற்பற்றாமல் சென்றுள்ளார்கள். இவர்கள் சுற்றுலா வீசா ஊடாக இலங்கையில் இருந்து டுபாய் நோக்கிச் சென்று அங்கிருந்து ஓமான் சென்றுள்ளார்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் இவர்கள் பதிவு செய்யப்படவில்லை.இந்த விவகாரத்துடன்

தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சுற்றுலா வீசா ஊடாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என்றார். இதன்போது எழுந்த ஹெக்டர் அப்புஹாமி எம்.பி. ஓமான் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப் பெண்கள் தொடர்பில் இராஜாங்க  அமைச்சரின் பதில் பாரதூரமானது. வெளிநாட்டு பணியகத்தில் பதிவு செய்யவில்லை என்பது இரண்டாம் பட்ச விவகாரம், பகிரங்கமான முறையில் இலங்கை பெண்கள் ஏலத்தில் விற்கப்படுகிறார்கள். ஆகவே இவர்களை இலங்கை பிரஜைகளாக கருதி உரிய நடவடிக்கை எடுங்கள் என்றார்.

இதற்கு மீண்டும் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார், இவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல்,இடைத்தரகர் ஊடாக முறையற்ற வகையில் சென்றுள்ளார்கள். இவ்விவகாரம் தொடர்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. முறையற்ற வகையில் செல்லும் போது பணியகத்தினால் பொறுப்பேற்க முடியாது.இருப்பினும் இவர்கள் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் வெளிவிவகாரத்துறை அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார்.

Spread the love