மனிதாபிமானத்திலும் ஜொலிக்கும் கே.எல். ராகுல்

அனைத்து வகை கிரிக்கெட் பேட்டிங்கில் ஜொலிக்கும் கே.எல் ராகுல் தற்போது தனது உள்ளத்தாலும் ஜொலித்துள்ளார். அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மிகப் பெரிய தொகையை வழங்கி அந்தச் சிறுவனுக்கு புது வாழ்வை அளித்திருக்கிறார். இதன் காரணமாக சமூக வலை தளங்களில் ராகுலை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.


மும்பையை சேர்ந்த வரத் நலவாடே என்ற சிறுவன் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறான். அடிக்கடி அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, மருத்துவரிடம் சென்ற பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வரத் நலவாடேவிற்கு அப்லாஸ்டிக் அனீமியா நோய் இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த நோய் தாக்கப்பட்டவர்களுக்கு இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகும். இதனால் சிறுவனுக்கு சிறிய காய்ச்சல் வந்தால் கூட மாதக் கணக்கில் இருக்கும்.


வரத்தின் நிலைமையை கணக்கில் கொண்டு உடனடியாக பி.எம்.டி எனப்படும் எலும்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதற்கு அதிகமாக செலவு ஆகும் என்பதால் பொது மக்களிடம் உதவி கோரினர் வரத்தின் பெற்றோர். சிறுவனின் சிகிச்சைக்காக ஒன்லைன் மூலமாக நன்கொடை அளிக்கும்படி பொது மக்களிடம் கோரிக்கை வைத்தனர். இதனை அறிந்த கே.எல். ராகுல் உடனடியாக 31 இலட்சத்தை சிறுவனுக்கு வழங்கியுள்ளார். இதனால் வரத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது சிறுவனின் உடல்நிலை சீராக உள்ளதாக அவனது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Spread the love