பேச்சுவார்த்தை மூலமே தீர்வு, இந்தியா – சீனா முடிவு

இந்திய சீன எல்லையான லடாக் பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களுக்கிடையில் அடிக்கடி ஏற்படும் முறுகல் நிலைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணமுடியும் என இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

லடாக்கின் சில பகுதிகளில் இந்தியாவும் சீனாவும் சுமார் 50,000க்கும் மேற்பட்ட வீரர்களை ஆயுதங்களுடன் நிறுத்தி வைத்துள்ளதால் அங்கு பதற்றநிலை நிலவி வருகின்றது.

இந்நிலையில் லடாக்கின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய மற்றும் சீனப் படையினர்களுக்கு இடையிலேற்ப்பட்ட முறுகல் நிலை, மற்றும் முரண்பாடுகளுக்கு பேச்சு வார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்பதால் அதற்கான இணக்கப்பாட்டினை ஏற்படுத்த பேச்சுவார்த்தையே சிறந்த ஊடகம் என்று இரு தரப்பினரும் இணைந்து சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 11 ஆம் திகதி நடந்த இந்தியா- சீனா இராணுவத் தளபதிகள் மட்டத்திலான 15ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் ஏதுமில்லை என்றபோதும் பேச்சுவார்த்தையைத் தொடர இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.

இது குறித்த கூட்டறிக்கை ஒன்று 12ம்திகதி  வெளியிடப்பட்டது. இதில் இருதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்டும் வரை பேச்சுவார்த்தை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love