புதிய சாதனை படைத்த ருதுராஜ்

2022 விஜய் ஹசாரே கிண்ண தொடரின் நேற்றைய போட்டியில் உத்தரப் பிரதேசம் – மகாராஷ்டிரா அணிகள் மோதின.இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பி மைதானத்தில் நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வென்ற உத்தரபிரதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி மகாராஷ்டிரா அணி களமிறங்கியது. 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக அணியின் தொடக்க வீரரும் அணித்தலைவருமான ருதுராஜ் கெய்க்வாட் 159 பந்தில் 220 ரன்கள் குவித்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இது அவரது முதல் இரட்டைச் சதம் ஆகும். இந்த போட்டியின் 49ஆவது ஓவரில் ஏழு சிக்ஸர்களை விளாசி யாரும் படைக்காத புதிய சாதனையை ருதுராஜ் படைத்தார். அந்த ஓவரை உத்தரப் பிரதேச அணியின் சிவா சிங் வீசினார். அதில் 43 ரன்கள் விட்டுக்கொடுக்கப்பட்டது.

Spread the love