அரையிறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ்

உலக கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ் கால்பந்தாட்ட அணி. கட்டாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்ற காலிறுதி சுற்று ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தின் 17 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ட்சோயமெனி ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

2 ஆவது பாதி ஆட்டத்தின் 54 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சம நிலையில் இருந்தது. பின்னர் 78 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஒலிவர் கிரவுட் ஒரு கோல் அடித்து தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் ஆட்ட நேர முடிவிலும் வேறு எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

Spread the love