பிரதமரின் கருத்துப்படி பொருளாதார நெருக்கடிக்கு உடனடித் தீர்வுகளில்லை?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டுமக்களுக்கு நேற்று இரவு ஆற்றிய உரையில், பொருளாதார நெருக்கடிக்கான உடனடித்தீர்வுகள் தொடர்பில் எந்த விடயங்களையும் தெரிவிக்கவில்லை . இது தொடர்பில் மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தபோதும், பிரதமரின் உரை ஏமாற்றமாக அமைந்துள்ளது. இதேவேளை- ‘சிஸ்டம் சேஞ்ச்'(system change) தொடர்பில் நீண்டகால யோசனைகளை பிரதமர் தனது உரையில் முன்வைத்தார். அவரது உரையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

  • சுதந்திரத்துக்கு முன்னரான அரசமைப்புச் சபை

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1931 முதல் 1947 வரை அரசமைப்பு சபை இருந்தது. அந்த சபையானது குழு முறையைப் பின்பற்றிச் செயற்பட்டது. பொதுப் பணத்தைக் கட்டுப்படுத்த கணக்குக் குழுவும் இருந்தது. அந்த நேரத்தில் இந்த வழிமுறையை வெற்றிகரமாகச் செயற்படுத்த எங்களுக்கு வாய்ப்புக்கிடைத்தது. நாடாளுமன்றத்தின் கட்டமைப்பை மாற்றி, தற்போதுள்ள நாடாளுமன்ற முறை அல்லது வெஸ்ட்மின்ஸ்டர் முறை மற்றும் அரசமைப்பு முறை ஆகியனவற்றை இணைத்து புதிய அமைப்பை உருவாக்க வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றம் நாட்டை ஆள்வதில் பங்கேற்கலாம்.

  • சட்டங்களை வலுப்படுத்தல்

முதலாவதாக, நாணய அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு தற்போதுள்ள சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். பிரிட்டன், நியூஸிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் முன்மாதிரியைப் பின்பற்றி, நாங்கள் வலுவான மற்றும் சக்திவாய்ந்த சட்டத்தை முன்மொழிகிறோம். தற்போது அரசு நிதி தொடர்பாக மூன்று குழுக்கள் உள்ளன. பொது நிதிக்குழு, கணக்குக் குழு மற்றும் பொது நிறுவனங்களுக்கான குழு ஆகிய மூன்று குழுக்கள் ஆகும். இந்த மூன்று குழுக்களின் அதிகாரங்களை பலப்படுத்துவதற்காக சபைத்தலைவர் தினேஷ் குணவர்த்தன பல யோசனைகளை முன்வைத்துள்ளார். இதற்கு மேலதிகமாக சில பரிந்துரைகளை நாம் முன்வைக்கிறோம்.

  • புதிய குழுக்கள்

நிதி விவகாரங்கள் தொடர்பாக இரண்டு புதிய குழுக்களை அமைக்க நாங்கள் செயற்பட்டு வருகிறோம். இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய சட்ட மற்றும் வழிமுறைக் குழுவை நியமிப்போம். இரண்டாவதாக, நாம் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நிதி நிலை. பலவீனமான பிரச்சினைகள் பல இதில் உள்ளன. எங்களின் நிலையியற்கட்டளையின் கீழ் நாம் மேற்பார்வைக் குழுக்களை நியமிக்க முடியும். இதற்கு முன் கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்படவில்லை. எனவே, பத்து மேற்பார்வைக் குழுக்களை நியமிக்க நாங்கள் முன்மொழிகிறோம். அதற்கு நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஐந்து நிதிக்குழுக்கள் மற்றும் பத்து மேற்பார்வைக் குழுக்களின் தலைவர்கள் பின்வரிசை உறுப்பினர்களால் நியமிக்கப்படுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அவர்கள் அமைச்சர்களால் நியமிக்கப்படுவதில்லை. எனவே, அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து சுயாதீனமான மற்றும் அமைச்சர் மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இருவருடனும் இணைந்து செயற்படும் ஒரு வழிமுறையை உருவாக்க எங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

  • போராடுபவர்களும் பங்கேற்கலாம்

தற்போதுள்ள அமைப்பை மாற்ற (சிஸ்டம் சேஞ்ச்) வேண்டும் என இளைஞர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அவர்கள் தற்போதைய பிரச்சினைகளையும் அறிய விரும்புகிறார்கள். எனவே, இந்த 15 குழுக்களுக்கும் தலா நான்கு இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க நான் முன்மொழிகிறேன். அவர்களில் ஒருவர் இளைஞர் நாடாளுமன்றம் ஊடாக நியமிக்கப்படுவார். மற்ற மூவரும் போராட்டக்குழுக்கள் மற்றும் பிற ஆர்வலர் குழுக்களை சேர்ந்தவர்கள். இந்த நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறையை இளைஞர் அமைப்புகளே தீர்மானிக்கமுடியும். அத்துடன், குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தலாம் என்று நம்புகிறோம். இப்பணியின் மூலம் இளைஞர்கள் தாங்களாகவே பிரச்சினைகளை அறிந்து அதற்கான தீர்வுகளை வழங்க முடியும். அவர்கள் விரும்பினால் தேர்தலில் போட்டியிட முடியும்.

  • தேசிய சபை

தேசிய சபையையும் நாங்கள் முன்மொழிகிறோம். சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய குழு தேசிய சபை என்று அழைக்கப்படுகிறது. தேசிய சபை மிகவும் முக்கியமானது என்றே கூறவேண்டும். நாட்டின் கொள்கைகள் குறித்து இதில் பேசலாம். அமைச்சரவையின் முடிவுகள் குறித்தும் பேசலாம். இந்நாட்டின் நாடாளுமன்ற மறுசீரமைப்பு குறித்தும் பேசலாம். அப்படியானால், அதை அரசியல் அமைப்பு என்று சொல்லலாம். அமைச்சர்கள் மற்றும் குழுக்களின் தலைவர்களை அழைக்க தேசிய சபைக்கு உரிமை உண்டு.

  • ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டும்

நாம் முன்வைத்துள்ள புதிய முறைமையின்படி ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும். அமைச்சர்களின் அமைச்சரவையும் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டும். தேசிய சபை நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டும். பதினைந்து குழுக்கள் மற்றும் மேற்பார்வைக்குழுக்கள் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறவேண்டும். அமைச்சரவை மூலம் அரசாங்கத்தை கட்டுப்படுத்தவும், ஜனாதிபதியின் பணிகளை ஆராயவும், தேசிய சபையின் மூலம் அரசியல் விவகாரங்களை மேற்பார்வையிடவும், பதினைந்து குழுக்களின் நிதி விவகாரங்கள் மற்றும் பிற விடயங்களை மேற்பார்வையிடவும் ஒரு அமைப்பு உள்ளது – என்றார்.

Spread the love