பாகிஸ்தானை இறுதிப் பந்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி

ரி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பாட்டம் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 159 ஓட்டங்கள் எடுத்தது.

அதிரடியில் மிரட்டிய இப்திகார் அகமது 51 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷான் மசூத் 52 ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட்டும், ஷமி, புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து, 160 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல், ரோகித் சர்மா களமிறங்கினர். கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா தலா 4 ஓட்டங்கள் எடுத்து அவுட்டாகினர்.

சூர்யகுமார் 15 ஓட்டத்திலும், அக்சர் படேல் 2 ஓட்டத்திலும் அவுட்டாகினர். இந்திய அணி 6.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 31 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து திணறியது. அடுத்து இறங்கிய விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஜோடி பொறுப்புடன் ஆடியது. 5 ஆவது விக்கெட்டுக்கு சேர்ந்த இந்த ஜோடி 100 ஓட்டங்களை கடந்து அசத்தியது. விராட் கோலி அரை சதம் கடந்து அசத்தினார். பாண்ட்யா 40 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில், இந்தியா 20 ஓவரில் 160 ஒட்டங்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது. கோலி 82 ஓட்டத்துடன்; அவுட்டாகாமல் உள்ளார்.

Spread the love