பதுளையில் 15 வைத்தியர்களுக்கு கொரோனா

பதுளை பொது வைத்தியசாலையின் 15 வைத்தியர்கள் உட்பட 55 நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊவா மாகாண ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ இந்த விடயத்தை உறுதி செய்துள்ளார்.

பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் ஒன்பது வைத்தியர்களில் அறுவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அவசர சிகிச்சை பிரிவில் இரு தாதியர்களுக்கும் கனிஷ்ட நிர்வாகக் குழுவின் ஊழியர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, நோயாளர் விடுதிகளில் பணிபுரியும் வைத்தியர்களுக்கும் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலை தாதியர்கள், கனிஷ்ட பிரிவு ஊழியர்கள், சுகாதார பிரிவின் ஊழியர்களுக்கும் கொவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது என வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ இதன் போது தெரிவித்தார்.

கொவிட் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தத்தமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Spread the love