நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு !

நேற்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படுவதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். தமிழ் – சித்திரை புது வருடப் பிறப்பை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதன்படி, விசேட சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 15 லீற்றர் வரை அதிகரிக்கப்படுகிறது. சாதாரண சேவைகளில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 05 லீற்றரில் இருந்து 8 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 7 லீற்றராகவும், கார்களுக்கான ஒதுக்கீடு 30 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பஸ்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 40 லீற்றரில் இருந்து 60 லீற்றர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. வேன்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

லொறிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50 லீற்றரில் இருந்து 75 லீற்றர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், விசேட தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளது.

Spread the love