துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமை, அமைதியான போராட்டக்காரர்களை அடக்குதல் போன்ற குற்றச்சாட்டுகளில் இலங்கை பொலிஸார்….

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, இலங்கை பொலிஸார் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமை மற்றும் அமைதியான போராட்டக்காரர்களை அடக்குவதற்கு பொலிஸ் படையை பயன்படுத்தியமை உட்பட்ட பல ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கை இளம் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட அடக்குமுறைக்கு எதிராக நடவடிக்கைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின்கீழ் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த முறைப்பாட்டில், பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாகர லியனகே மற்றும் கொம்பனித்தெரு மற்றும் மருதானை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட அதிகாரிகள் குழுவினர் அமைதியான போராட்டங்களை நசுக்க தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சட்ட அமுலாக்க அதிகாரி தனது அதிகாரத்தை அல்லது முடிவெடுக்கும் அதிகாரங்களை ஒரு நபர் அல்லது குழுவிற்கு சாதகமாக செயற்படுத்துவது அல்லது சட்டத்தை ஒரு பாரபட்சமான முறையில் செயல்படுத்துவதற்கு அத்தகைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் அது ஊழல் என வரையறுக்கப்படுகிறது.

ஊழல் என்பது சட்ட விரோதமாக நிதி அல்லது சொத்துக்களை கையகப்படுத்துவது மட்டுமல்ல. ஒருவரின் அதிகாரத்தை பக்கச்சார்பான முறையில் பயன்படுத்துவதும் ஊழலாக வகைப்படுத்தப்படுகிறது என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதற்காக பொலிஸ் சேவை மற்றும் அதன் படை வளங்களை துஷ்பிரயோகம் செய்து ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் விசாரணையை ஆரம்பிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love