தாய்வான் சர்வதேச எல்லை பிராந்தியத்திற்குள் வரும் சீன விமானங்கள், கப்பல்கள் அழிக்கப்படும்-தாய்வான் சீனாவிற்கு எச்சரிக்கை

தங்கள் நாட்டின் சர்வதேச எல்லை பிராந்தியத்திற்குள் வரும் சீன விமானங்கள் மற்றும் கப்பல்கள் அழிக்கப்படும் என தாய்வான் சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒருபக்கம் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் மற்றொரு பக்கம் தாய்வான் – சீனா இடையிலான பதற்றமான நிலை நிலவி வருகிறது.

தற்போது, தீவு நாடான தாய்வானை சீனா தங்கள் நாட்டின் ஒற்றை அங்கமாக அறிவித்து வருகின்ற நிலையில், தாய்வான் குடியரசு முழு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, தங்களை சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தி வருகிறது.

ஆனால், தாய்வானின் இந்நிலைப்பாட்டை எதிர்த்து சர்வதேச தாய்வான் கடல் எல்லையில் சீனா தங்களது போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அத்துமீறி நுழைய செய்வதோடு, பிரமாண்ட போர் ஒத்திகை பயிற்சியையும் அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதனால், இவ்விரு நாடுகளுக்குமிடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் எனும் பதற்றமான சூழ்நிலை உலக நாடுகள் மத்தியில் நிலவி வருகின்றது.

இந்நிலையில், தாய்வானுக்கு அருகிலுள்ள 12 மைல் மண்டலம் என்று அழைக்கப்படும் பகுதிக்குள் நுழையும் சீனாவின் போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை தாய்வான் ஆயுத படை அழித்து ஒழிக்குமென தாய்வான் பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது. இந்த 12 மைல் மண்டலம் என்பது தாய்வானுக்கு சொந்தமான நீர் மற்றும் வான்பரப்பை உள்ளடக்கிய பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love