தமிழ் மக்களை முட்டாள்கள் என எண்ண வேண்டாம்- திருமதி லீலாவதி

பொங்கலுக்கு தீர்வு… தீபாவளிக்கு தீர்வு…! என சம்பந்தன் தமிழ் மக்களை ஏமாற்றியதுபோல மீண்டும் அரசுடன் பேசப்போகிறோம் என கூறுவதை நம்புவதற்கு தமிழ் மக்களை முட்டாள்கள் என எண்ண வேண்டாம் என வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் திருமதி லீலாவதி கூறியுள்ளார்.


யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து கூறும்போதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி சந்திக்கக் கேட்டவுடன் சுமந்திரனும் சம்பந்தனும் வருகிறோம் என முண்டி அடிக்கிறார்கள். சம்பந்தன் பொங்கலுக்கு தீர்வு வரும் தீபாவளிக்கு தீர்வு வரும் என தமிழ் மக்களை ஏமாற்றியதுபோதும், தமிழ்தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற பல பாராளுமன்ற வாக்கெடுப்புக்களில் விவாதம் முடிவடைந்தவுடன் முதலில் ஆதரிக்கிறோம் என கையை உயர்த்தியவரே சம்பந்தன், தமிழ்தேசியக் கூட்டமைப்பு அவர்களின் சொத்து கிடையாது என்பதை நன்கு உணர வேண்டும்.

அரசாங்கத்துடன் தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் பேசிய பேச்சுகள் எவ்வித தீர்வையும் தரவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆகிய நாம் பத்து வருடங்களுக்கு மேலாக தமது உறவுகளைத் தேடி போராட்டம் நடத்தி வருகிறோம்.

எமது போராட்டப் பந்தலுக்கு வந்த சம்பந்தன் ஒரு வாரத்துக்குள் பேசி தீர்வு தருவதாக கூறியிருந்தார். அதன்பின் அவர் எமது பக்கம் திரும்பிப்பார்க்கவில்லை. அரசாங்கம் அழைத்தவுடன் ஓடிச்செல்லும் இவர்கள் தமிழ் மக்களுக்காக இவ்வளவு காலம் எதைச் சாதித்தார்கள் என கூறவேண்டும். அரசாங்கத்துடன் சம்பந்தனும் சுமந்திரனும் இதுவரை காலமும் தமிழ் மக்களுக்காக பேசச்சென்றதில்லை தமது தனிப்பட்ட அரசியல் இலாபங்களை அனுபவித்து கொள்வதற்காகவே முண்டியடித்து சென்றனர்.

தமிழ் மக்களின் நலனுக்காக எக்காலத்திலும் செயற்படாத இவர்களை தமிழ் மக்கள் விரைவில் வெளியேற்ற வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கும் இடையில் இடம்பெறும் பேச்சுவார்த்தைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் செல்லக்கூடாது என்பது வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் கோரிக்கையாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Spread the love