சீனாவுடன் புதிய கெடுபிடி யுத்தம் தேவையில்லை -அமெரிக்க ஜனாதிபதி பைடன்

தாய்வான் விவகாரத்தில் சீனாவுடன் புதிய கெடுபிடியுத்தம் ஏற்படத் தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார் ‘இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டுக்கு சென்றுள்ள ஜோ பைடனும், சீன ஜனாதிபதி ஜிங்பினும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சந்தித்து பேசினர். ‘இந்தச் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், ஒரே சீனா கொள்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும்.

அதே நேரத்தில், தாய்வானை கைப்பற்ற அண்மை காலமாக சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை சீனா தொடரக் கூடாது. தாய்வான் விவகாரத்தை அமெரிக்கா தீவிரமாக கவனத்தில் எடுத்து கொண்டுள்ளது. ஆனால், இதில் மோதல் ஏற்படக்கூடாது. இதனால் சீனாவுடன் புதிய கெடுபிடியுத்தம் ஏற்படத் தேவையில்லையென நம்புகிறேன். திபெத், ஹொங்கொங்கிலும், சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்திலும் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பிரச்சினைகள் குறித்து சீன ஜனாதிபதியுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேசினார்.

உக்ரைனில் கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வரும் போரில் அணு ஆயுத தாக்குதல் மிரட்டல் விடுக்கப்படுவதற்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அணு ஆயுத போர் எப்போதும் ஏற்படக் கூடாது என்றும் அதில் யாரும் வெற்றி ‘ பெறவும் முடியாது என்றும் இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்வான் தீவில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அண்மையில் அமெரிக்க மேல் சபையின் தலைவர் நான்சி பெலோசியின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, எல்லைப் பகுதியில் குண்டுகளை வீசியது. இதற்கு பதிலடியாக தைவானும் குண்டுகளை வீசியதால் போர் பதற்றம் ஏற்பட்டது.

Spread the love