சவூதி அரேபியாவின் உள்ளுர் கிளப் அணியில் ரொனால்டோ -200 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம்

பிரபல கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்த்துக்கல் நாட்டை சேர்ந்த இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இரசிகர்கள் உள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வந்த ரொனால்டோ அந்த கிளப் அணியில் இருந்து சமீபத்தில் வெளியேறினார். இதையடுத்து அவரை ஒப்பந்தம் செய்ய பல கிளப் அணிகள் போட்டியிட்டன.

இதில் சவுதி அரேபியாவை சேர்ந்த கிளப் அணியில் ரொனால்டோ இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த கிளப் அணியான அல்-நசர் அணியுடன் ரொனால்டோ ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின்படி அவர் ஆண்டுக்கு 200 மில்லியன் யூரோ பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்-நசர் அணியுடன் ரொனால்டோ, 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒப்பந்தம் செய்துள்ளார். இதையடுத்து அல்-நசர் அணியின் டி-சர்ட் ரொனால்டோவிடம் வழங்கப்பட்டது. அவரது பெயர் பொறித்த டி-சர்ட்டை அறிமுகப்படுத்தினர்.

புதிய அணியில் இணைந்தது குறித்து ரொனால்டோ கூறியதாவது:- ஐரோப்பிய கால்பந்தில் நான் பெற்ற வெற்றியால் அதிர்ஷ்ட  சாலியாக உணர்கிறேன். ஆசியாவில் எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இதுவே சரியான தருணம் என்று கருதுகிறேன். எனது புதிய அணியின் வீரர்களுடன் இணைவதை எதிர்நோக்கி இருக்கிறேன். அவர்களுடன் சேர்ந்து வெற்றியை அடைய உதவுவேன் என்றார். அல் -நசர் கிளப் அணி டுவிட்டரில் கூறும் போது.

வரலாறு உருவாக்கப்பட் டிருக்கிறது. இது எங்கள் கிளப்பை இன்னும் பெரிய வெற்றியை அடைய ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், எங்கள் லீக், தேசம், எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கும் ஒரு கையொப்பமாகும். ரொனால்டோவை வரவேற்கிறோம் என்று தெரிவித்து உள்ளது. 37 வயதில் ரொனால்டோ விளையாட உள்ள 6 ஆவது அணி அல்-நசர் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love