சர்வதேச நீதி மன்று: ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்தது இந்தியா..?

சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இந்திய நீதிபதி வாக்களித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice)   உக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல் குறித்த விசாரணை நடந்தது. இதில் இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி ரஷ்யாவைக் கண்டித்து வாக்களித்தார்.

நீதிமன்ற விசாரணையின் போது, ரஷ்யா இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரேன் மீது படையெடுத்துள்ளதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் முதல் நிலை நீதிபதி ஜோன் டோனோக் கூறுகையில், “ரஷ்ய கூட்டமைப்பு தனது இராணுவப் படைகளைப் பயன்படுத்தி மிக மோசமான சர்வதேச சட்ட விதிமுறை மீறல்களை நிகழ்த்தி வருவது குறித்து, இந்த நீதிமன்றம் மிகுந்த கவலை கொள்கிறது. மேலும் ரஷ்யா இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரேன் மீது படையெடுத்துள்ளதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

இங்கு நடைபெற்ற விசாரணையின்போது இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி ரஷ்யாவின் செயல்களைக் கண்டித்து வாக்களித்தார். சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதியாக பண்டாரி இந்திய அரசின் உதவியுடனேயே அமர்த்தப்பட்டுள்ளார் ஆனாலும் கூட அவருடைய இந்த வாக்களிப்பு தனிப்பட்ட கருத்தாகவே கருதப்படுகிறது ,இது அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டின் கருத்தாகக் கொள்ளப்படமாட்டாது.

இந்தியா இதற்கு முன்னர் நடைபெற்று வந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டங்களில் ரஷ்யாவுக்கு எதிரான எந்தத் தீர்மானங்களிலும் வாக்களிப்பதை தவிர்த்தே வந்தது .அது மட்டுமல்ல உக்ரேன், ரஷ்யா ஆகியவை தமது பிரச்சனைகளுக்கு  பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்றே இன்றளவும் தெரிவித்து வருகிறது.  எனவே ராஜாங்க ரீதியான கொள்கை வேறு, சர்வதேச நீதிமன்ற இந்திய நீதிபதியின் தனிப்பட்ட கருத்து வேறு, என்று இந்தியத் தரப்பிலிருந்து தகவல்கள்  தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தாங்கள் தற்காப்புக்காகவே ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம் என  ரஷ்யா தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 7, 8 தேதிகளில் சர்வதேச நீதி மன்றத்தில் நடைபெற்ற   விசாரணையை எழுத்துபூர்வ பதிலின் மூலம் ரஷ்யா  புறக்கணித்தது நினைவுகூரத்தக்கது.

அதில், ரஷ்ய தரப்பில் உக்ரைன் எங்கள் மீது போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளச் சொல்வது செல்லுபடியாகாது. அது 1948 இனஅழிப்பு உடன்படிக்கையை மேற்கோள் காட்டி உக்ரைன் முறையிட்டுள்ளது. ரஷ்யா  தற்காப்புக்காகவே தாக்குதல் நடத்துகிறது. இன அழிப்பில் ஈடுபடவில்லை என்று பதிவிட்டிருந்தது.

இந்நிலையில் ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் 15 நாடுகளின் நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் அமெரிக்கா, ஸ்லோவாக்கியா, பிரான்ஸ், மொராக்கோ, சோமாலியா, உகாண்டா, இந்தியா, ஜமைக்கா, லெபனான், ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய 13 நாடுகளின் நீதிபதிகள் வாக்கெடுப்பில் உக்ரேனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.  ரஷ்யா மற்றும் சீன நீதிபதிகள் உக்ரைனுக்கு எதிராக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Spread the love