சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தொண்டர் அணி- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

சட்ட விரோத செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “எமது பிரதேசங்களில் பல்வேறு வகைகளில் பலதரப்பட்ட முறைகேடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நாளாந்தம் அறியக்கிடைக்கின்றது. இவற்றை கட்டுப்படுத்த கடலோர காவற்படையினர் செயற்பட்டுவருகின்ற போதிலும், அவர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்த தொண்டர் அணி செயற்படும்.

யாழ். மாவட்டத்தின் சில கிராமங்களில் கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரம் குடிசை தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதான பாடசாலைகளின் முன்பாக திடீரென தோன்றி மறைகின்ற கச்சான் மற்றும் சிற்றுண்டி வியாபாரிகள் தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டும்

போதைப் பாவனை மற்றும் பரவலைக் கட்டுப்படுத்த காவல்துறையினரின் சிவில் பாதுகாப்புக் குழுக்களைப் பலப்படுத்தி பிரதேச ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதற்காக நீதியமைச்சரோடு பேசி சட்டம், நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, புனர்வாழ்வு மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.

Spread the love