சட்டவிரோத மீன்பிடியினை உடன் நிறுத்த வேண்டும் அமைச்சர் டக்ளஸ்

தமிழகத்தின் மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை உடன் நிறுத்த வேண்டுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழக மீனவர்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தில் அமைந்துள்ள இந்தியாவிற்கான இலங்கையின் துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் நாகைப்பட்டினம், இராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்ட கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற மெய்நிகர் கலந்துரையாடலிலேயே அமைச்சர் இந்த கோரிக்கையினை முன் வைத்துள்ளார்.

தொப்புள் கொடி உறவுகளான தங்களின் வாழ்வாதாரத்தினை கருத்திற் கொண்டு மாற்று தொழில் முறையில் ஈடுபடும் வரைக்குமான கால அவகாசத்தினை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும், கைப்பற்றப்பட்டுள்ள தங்களின் மீன்பிடிப் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்கின்ற செயற்பாடுகளை மீள் பரிசீலனை செய்யுமாறும் தமிழக மீனவர்கள் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அவற்றுக்கு பதில் கூறிய அமைச்சர் டக்ளஸ்

“பண்பாட்டு கலாசார ரீதியாகவும் பல்வேறு தேவைகள் காரணமாகவும் தமிழக உறவுகளுடனான தொப்புள் கொடி உறவு வலுப்படுத்த வேண்டும் என்பததை உளமார தான் எதிர்பார்ப்பதாகவும், அதற்காக இலங்கையின் கடல் வளம் அழிந்து போவதை அனுமதிக்க முடியாது.

அதேபோன்று, பயன்படுத்த முடியாதவை என்ற அடிப்படையில் இந்தியக் கடற்றொழிலாளர்களினால் கைவிடப்பட்ட மீன்பிடிப் படகுகளே ஏலமிடப்படுவதாகவும் தெளிவுபடுத்தியதோடு

பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒரு சுமூகமான தீர்வினை காண்பதற்கு தயாராக இருப்பதாகவும், பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான தீர்வினை எட்டுவது ஒருபுறமிருக்க, இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து சட்ட விரோத தொழிலில் ஈடுபடுவதை இந்தியக் கடற்றொழிலாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Spread the love