குருந்தூர் மலையில் கட்டப்படும் விகாரையில் அமைச்சர்கள்

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் தொல்லியல் அகழ்வு இடம்பெற்றுவரும் இடத்தில், சர்ச்சைக்குரிய வகையில் அமைக்கப்பட்டு வரும் விகாரையில் 40 இற்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் மற்றும் அமைச்சர்கள் பிரித் ஓதல் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மேலும் தெரிய வருகையில், குமுளமுனை – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலைக்கு நேற்றிரவு (05) வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜனசுமன ஆகியோர் 40 இற்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளுடன் இணைந்து திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இதன்போது,ஹெப்பத்திகொல்லாவ, புல்மோட்டை அரிசிமலை,மணலாறு பகுதிகளிலிருந்து வருகை தந்த 40 இற்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் தொல்லியல் அகழ்வு இடம்பெற்றுவரும் இடத்தில் அமைக்கப்பட்டு வரும் விகாரையில் பிரித் ஓதல் மேற்கொண்டு அமைச்சர்களோடு இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு வட்டுவாகலில் 617 ஏக்கர் மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமில் இரவு தங்கியிருந்து, அமைச்சர்கள் இருவரும் இன்று அதிகாலை புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுதந்திர நாளான 04 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், இரா. சாணக்கியன் உள்ளிட்டோர் குருந்தூர் மலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் அமைச்சர்களின் வருகை இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love