கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இன்று

வரலாற்றுச் சிறப்புமிக்க கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இன்று (13) நடைபெற்றது.

கடந்த 3 ஆண்டுகளுக்குப் பின்னர் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனியும் இன்று இடம்பெறவுள்ளது. திருத்தல பீடத்தின் அருகில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோனியாரின் திருச்சொரூபத்திற்கு 200 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமை தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைகின்றது.

கடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவின் வேஸ்பர்ஸ் ஆராதனை கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்றிரவு 7 மணிக்கு நடைபெற்றது.

திருநாள் தினமான இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில் 4 மணிக்கு தமிழிலும் 5 மணிக்கு சிங்களத்திலும் 6 மணிக்கு ஆங்கிலத்திலும் திருவிழா திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன் பின்னர் திருவிழா பாடற் திருப்பலிகள் காலை 8 மணிக்கு தமிழிலிலும் காலை 10 மணிக்கு சிங்களத்திலும் நண்பகல் 12 மணிக்கு ஆங்கிலத்திலும் ஒப்புக்கொடுக்கப்படும்.

இதன் பின்னர் மாலை 5 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி இடம்பெற்று, இரவு 8 மணியளவில் நற்கருணை ஆசீர்வாதமும் புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீர்வாதமும் இடம்பெறும்.

திருவிழா தினத்தன்று புனிதரின் பவனிவரவுள்ள ஆலயத்தை சூழவுள்ள வீதிகள் மூடப்பட்டிருக்கும் எனவும் வாகன சாரதிகள் மாற்று இந்த வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவித்துள்ளர்.

Spread the love