எரிபொருள் வழங்கக் கோரி நாட்டின் பல பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம்

எரிபொருளினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி நாட்டின் பல பகுதிகளில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதனிடையே தமக்கான எரிபொருளை உரிய முறையில் பெற்றுத்தருமாறு கோரி யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று கையெழுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே தெமட்டகொட பகுதியில் எரிபொருள் கோரி முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டம் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. அத்துடன் கொழும்பு பேஸ்லைன் வீதியில் நேற்று முற்பகல் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எரிபொருளை உரிய முறையில் பெற்றுத்தருமாறு கோரி காலி வீதி தெஹிவளை பகுதியில் வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கொழும்பு பஞ்சிகாவத்தை பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் குருநாகல், வவுனியா, மன்னார், பதுளை, ஹட்டன் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலும் எரிபொருள் கோரி மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையினை அவதானிக்க முடிந்தது.

Spread the love