எரிபொருள் கோட்டா மேலும் ஒரு வாரத்திற்கு அமுலில் இருக்கும் – பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

சித்திரை புத்தாண்டு காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டா மேலும் ஒரு வாரத்திற்கு அமுலில் இருக்கும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்பட்ட நாட்களில் பதிவான நுகர்வு உள்ளிட்ட தரவுகளை ஆராய்ந்ததன் பின்னரே அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டாவை தொடர்ந்தும் வழங்குவதா, இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டா திருத்தப்படும் திகதி குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் கூறினார்.

கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் கோட்டாவை அதிகரிப்பதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன் பிரகாரம், முச்சக்கர வண்டிக்கான 5 லீட்டர் எரிபொருள் கோட்டா, 8 லீட்டராக அதிகரிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளுக்கான கோட்டா 4 லீட்டர் முதல் 7 லீட்டர் வரை அதிகரிக்கப்பட்டது. பஸ்ஸுக்கான எரிபொருள் கோட்டா 40 லீட்டர் முதல் 60 லீட்டராக அதிகரிக்கப்பட்டதுடன், காருக்கான எரிபொருள் கோட்டா 30 லீட்டராக அதிகரிக்கப்பட்டது.mவேனுக்கான எரிபொருள் கோட்டா 20 லீட்டரிலிருந்து 30 லீட்டர் வரை அதிகரிக்கப்பட்டது.

Spread the love