எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து; மேலும் 2.5 மில்லியன் டொலர் இழப்பீடு

கொழும்புத் துறைமுகத்திற்கு அருகாமையில், கடலில் விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனத்தின், உடன்பாட்டிற்கு அமைவாக, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை காப்பீடாகச் செலுத்துவதற்கு உடன்பட்டுள்ளது. குறித்த பணம் இன்னும் சில நாட்களில் கிடைக்குமென, எதிர்பார்க்கப்படுவதாக, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் திருமதி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.


எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து இடம் பெற்ற ஜூன் மாதம் 31 ஆம் திகதி முதல், மாசடைந்த கடல் மற்றும் கடலோரப் பகுதிகளை சுத்தம் செய்வதற்காக மாத்திரம், குறித்த பணம் செலவிடப்பட விருப்பதாக சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், கூறியுள்ளார். 3.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக கோரிய போதிலும், 2.5 மில்லியன் டொலர்கள் மாத்திரமே இழப்பீடாக வழங்குவதற்கு, குறித்த கப்பல் நிறுவனம் ஒப்புக்கொண்டது. மீதமுள்ள பணத்தைப் பெறுவதற்கு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கூறியுள்ளார். இதற்கு முன்னர், 3.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடாகப் பெறப்பட்டது. இந்தக் கப்பல் தீ விபத்தினால், ஏற்பட்ட கடல்சார் சூழல் மாசுபாட்டினைக் கட்டுப்படுத்தும் செலவுகள், மற்றும் மீனவர்களுக்கு ஏற்பட்ட நேரடி மற்றும் மறைமுகமான சேதங்களுக்கு, மீன்பிடித்திணைக்களத்தினால், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக, கப்பல் நிறுவனம் குறித்த தொகையினை, வழங்கியுள்ளது. நவம்பர் 1 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில், இது தொடர்பில் ஏற்பட்ட செலவீனங்களுக்கு மூன்றாவது காப்பீட்டு உரிமையைக் கோருவதற்கு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.

Spread the love