எகிப்து அரசுக்கு கடந்த 135 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வருவாய் ஈட்டித்தந்த சுயஸ் கால்வாய்

எகிப்தின் மிக முக்கிய வருவாய் ஆதாரமாக சுயஸ் கால்வாய் திகழ்ந்து வருகிறது . இந்த கால்வாய் மூலம் 2021 ஜூலை மாதம் முதல் 2022 ஜூன் மாதம் வரை, எகிப்து அரசாங்கத்துக்கு கடந்த 135 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சுமார் 7 பில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளது.


கடந்த வருமானத்தை விட இது 20.7 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சுயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற சரக்குக் கப்பல் அகப்பட்டுக்கொண்டதால் சுமார் ஒரு வாரத்திற்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் கோடி டொலர் வர்த்தக இழப்பு ஏற்பட்டது. 2021-22 ஆம் ஆண்டில் 13 லட்சம் தொன் சரக்குகள் சுயஸ் கால்வாய் வழியாக சென்றுள்ளது. இது 2020 -21 ஆம் ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகம் ஆகும்.

சர்வதேச அளவில் பெற்றோலிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், சுயஸ் கால்வாய் வழியாக பொருட்களை கொண்டு செல்லும் போது செலவுகள் குறையும் என்பதால் ஏற்றுமதியாளர்கள் அதனை தேர்வு செய்வதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று, ரஷ்யா – உக்ரைன் மோதல் ஆகியவற்றின் காரணத்தால் எகிப்தின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறையத் தொடங்கிய நிலையில், சுயஸ் கால்வாயின் வருவாய் அதிகரித்துள்ளதால், கால்வாயை மேம்படுத்தும் விதமாக 400 கோடி டொலர் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love