உள்ளூராட்சித் தேர்தல் பெப்ரவரியில் நடக்கும்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் இளைஞர் பிரநிதித்து வத்தை உள்வாங்குவது தொடர்பான சட்டமூலம், .தேர்தல் கால செலவுகளை குறைப்பது தொடர்பான சட்டமூலம் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்த உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சானக வகும்பர, 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரை நடைபெறவுள்ளதால் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்த வேண்டும் எனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்களின் போது ஆளும் தரப்பின் உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பல தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள். இளைஞர் பிரதிநிதித்துவம்,தேர்தல் கால செலவுகளை குறைப்பது தொடர்பான திருத்தங்களை மேற்கொள்ள அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.இளைஞர் பிரநிதித்துவத்தை உள்வாங்குவது தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். தேர்தல் கால செலவுகளை குறைப்பது தொடர்பான சட்டமூலத்தை கொண்டு வரதீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு சட்டமூலங்கள் தொடர்பில் சட்டமாதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு பின்னர் இவ்விரு சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டால் அது அடுத்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு செல்லுபடியற்றதாகும்,ஆகவே தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமான இவ்விரு சட்டமூலங்களையும் இயற்ற எதிர்தரப்பினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

Spread the love