இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட 9 பிரதான வங்கிகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்

இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட 9 பிரதான வங்கிகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி முக்கிய தீர்மானமொன்றை எடுத்துள்ளது. அதன்படி குறித்த வங்கிகளின் வலிமைத்தன்மையை பரிசீலிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கடந்த நான்காம் திகதி அரச மற்றும் தனியார் வங்கிகளின் பிரதானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலில் மேலும், தற்போது வங்கி கடன்களுக்காக விதிக்கப்படுகின்ற அதிக வட்டிவீதங்களுக்கு அமைய கடன்களில் ஏற்பட்டுள்ள பிரதிகூலங்கள் மற்றும் அனுகூலங்கள் தொடர்பில் இந்த பரிசீலனை இடம்பெறும். வர்த்தக வங்கிகளில் மேற்கொள்ளப்படும் வெளிப்புற கணக்காய்வினை போன்று அல்லாது மாறுப்பட்ட முறையில் இந்த கணக்காய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்திற்காக பல நிதித்துறை சீர்திருத்தங்கள், வலுவான மற்றும் போதுமான மூலதன மயமாக்கப்பட்ட வங்கி அமைப்பை நிறுவுதல் மற்றும் திருத்தப்பட்ட வங்கிச் சட்டம் உட்பட பல நிபந்தனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இதற்கமையவே குறித்த வலிமைத்தன்மை பரிசீலனை மேற்கொள்ளப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Spread the love