இலங்கை மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கை: துரிதப்படுத்துவதற்கு அரசாங்கம் அறிவுறுத்தல்

இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு அரசாங்கம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இலங்கை மின்சார சபையும் புதிய முறையின் கீழ் இலாபம் ஈட்டுவதற்கு தேவையான பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், உத்தேச மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு பணிகளை முன்னரே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், நடைமுறைகளை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், மறுசீரமைப்பு பணிகளும் தாமதமானது.

மறுசீரமைப்புச் செயற்பாட்டின் ஊடாக இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை சில பகுதிகளாகப் பிரித்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்தச் செயற்பாட்டின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் வாய்ப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் நிலையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், புதிய நிறுவனங்களுக்கு புதிய செயல்முறை மூலம் எண்ணெய் இறக்குமதி செய்ய வாய்ப்பும் கிடைக்கும்.

Spread the love