இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு விடுத்துள்ள பணிப்பு

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்களை உடனடியாக வெளியிடுமாறு இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு பணித்துள்ளது.

கொழும்பைச் சேர்ந்த சுரேன் டி பெரேரா என்பவரால் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிடம் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின் மீதான விசாரணையின் முடிவில் வெளியிடப்பட்ட தீர்ப்பிலேயே இவ்வாறு பணிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த வருடம் (2021) நவம்பர் 20 ஆம் திகதி இலங்கை பொலிஸ் திணைக்களத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொழும்பைச் சேர்ந்த சுரேன் டி பெரேரா என்பவரால் 01.01.2019 முதல் 20.11.2021 வரையான காலப்பகுதிக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய விபரங்களும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களும் விரிவாகக் கோரப்பட்டிருந்தன.

அவரது கோரிக்கைக்கு அமையத் தகவல்களை வழங்க முடியாது என பொலிஸ் திணைக்களத் தகவல் அதிகாரி நவம்பர் 27 ஆம் திகதி பதிலளித்ததைத் தொடர்ந்து, தகவல் கோரியவர் பொலிஸ் திணைக்களத்தின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரியிடம் மேன்முறையீடு செய்தார்.

குறித்தளிக்கப்பட்ட அதிகாரியும், தகவல் அதிகாரியின் பதிலுடன் முன்னுக்குப்பின் முரண்படும் வகையில் “தகவல் வழங்க முடியாது” என 2022 ஜனவரி 22 இல் பதிலளித்துள்ளார்.

இரு தரப்பிடமிருந்தும் தனக்குக் கிடைத்த பதில்களில் அதிருப்தி அடைந்த தகவல் கோரிய சுரேன் டி பெரேரா தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் 2022 மார்ச் 8 ஆம் திகதி மேன்முறையீடு செய்திருந்தார். இந்த மேன்முறையீடு மீதான விசாரணைகள் கடந்த மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது.

ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்னவின் தலைமையில், ஓய்வுபெற்ற நீதியரசர் ரோகினி வல்கம மற்றும் ஆணைக்குழுவைச் சேர்ந்த சட்டத்தரணிகள் கிசாலி பின்தோ ஜெயவர்த்தன, ஜகத்லியன ஆராச்சி ஆகியோரின் முன்னிலையில் இடம்பெற்ற விசாரணை மீதான தீர்ப்பு கடந்த 6 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தீர்மானப்படி, பொலிஸ் திணைக்களத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த வருடம் நவம்பர் 20ஆம் திகதி கொழும்பைச் சேர்ந்த சுரேன் டி பெரேரா என்பவரால் கோரப்பட்ட அனைத்துத் தகவல்களையும் எதிர்வரும் ஒக்ரோபர் 28 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க வேண்டும் என்றும் இலங்கைப் பொலிஸ் திணைக்களம் ஆணைக்குழுவின் தீர்ப்புக்கமையச் செயற்படத் தவறும் பட்சத்தில், பொலிஸ் திணைக்களத்துக்கு எதிராகவும், அதன் தகவல் அலுவலருக்கு எதிராகவும் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலும், அவர்கள் விடுவிக்கப்பட்ட பின் சமூக மயப்படுத்தப்படுதல் தொடர்பிலும் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு தனது ஆழ்ந்த கரிசனையையும் வெளிப்படுத்தியுள்ளது.

Spread the love