இந்தியாவின் அதானிக்கு நாட்டை வழங்கும் அரசாங்கம் யாழ் சிமெந்து தொழிற்சாலையை ஏன் மூடிவைத்திருக்கிறது?

 14 நாட்டை அபிவிருத்தி செய்கிறோம் என்று இந்தியாவின் அம்பானி அதானி நிறுவனங்களுக்கு நாட்டை வழங்கிவரும் அரசாங்கம், யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் உள்ள சிமெந்து தொழிற்சாலையை இன்றுவரை மூடிவைத்திருப்பது ஏன்? என்று, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தேசிய அமைப்பாளர் விமல் ரத்நாயக்க கேள்வியெழுப்பினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ”இந்த அரசாங்கத்தின் 16 வருடங்கள் பிரதமர் ஆட்சியில், 12 ஆண்டுகள் ராஜபக்சவின் குடும்பமே பிரதமராக இருந்துள்ளது. எனினும், நாட்டின் அபிவிருத்தி, கிராம விருத்தி வீழ்ச்சியடைந்துள்ளன. முஸ்ஸிம் காங்கிரஸ், ரிசாத் பதியுதீனின் கட்சி எதிர்க்கட்சி போல இருந்துகொண்டு அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களைப் பெறுகிறார்கள். மைத்திரிபால சிறிசேனவும் அப்படித்தான். அரசை விமர்சித்துக் கொண்டு அரசுக்கு ஆதரவு வழங்குகிறார்.

மன்னார் பகுதியில் கீரிச்சம்பா அதிகம் விளையும் பிரதேசமாகும். ஆனால், அங்கு யூரியா இல்லை . 18 ஆயிரம் ரூபா செலுத்தி எப்படியோ சிலர் அதைப் பெறுகிறார்கள்: உரம் இல்லாமையால் நெற் பயிர்கள் மஞ்சள் நிறமாக காட்சி அளிக்கின்றன. மன்னாரில் சிமெந்து தொழிற்சாலை அமைப்பதற்காக 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே காங்கேசன்துறையில் அமைக்கப்பட்ட சிமெந்து தொழிற்சாலை இன்னும் இயங்காமலேயே உள்ளது. இதேவேளை, இந்தியாவை அபிவிருத்தி செய்ய முடியாத அதானி, அம்பானி குடும்பம் இலங்கையை எவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும்?” என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

Spread the love