”இது சிரிக்கும் விடயம் அல்ல, நமது நாட்டின் எதிர்காலம் பாழாகிவிட்டது” -பசிலை சாடியுள்ள சனத் ஜயசூரிய

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய, நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் விசேட செய்தியாளர் சந்திப்பு தொடர்பில் அவரை கடுமையாக சாடியுள்ளார்.


நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ச, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்தார் அரசியலமைப்பின் 21வது திருத்தம், தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். மேலும், குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் பல விடயங்கள் நகைச்சுவையாக பேசியிருந்தார்.

இந்நிகழ்வு, குறித்து கருத்து தெரிவித்த சனத் ஜயசூரிய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரின் ஊடகவியலாளர் மாநாட்டில் தாம் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்தார்.


‘முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். இது சிரிக்கும் விடயம் அல்ல, நமது நாட்டின் எதிர்காலம் பாழாகிவிட்டது, நீங்கள் பொறுப்பேற்கவில்லை , இந்த அரசியல் நாடகங்களை நிறுத்துங்கள்”, என சனத் ஜயசூரிய டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.

Spread the love