அசாஞ்சேயை நாடுகடத்த எந்தத் தடையும் இல்லை ! இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு

ஜூலியன் அசாஞ்சேயை நாடுகடத்தக்கோரி அமெரிக்கா தொடர்ந்த வழக்கில், ஜூலியன் அசாஞ்சேயை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று லண்டன் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பிட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர்க்குற்றங்கள். மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ‘ஹேக்’ செய்து விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் பதுங்கியிருந்த அசாஞ்சே கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தூதரகம் தன் அடைக்கலத்தைத் திரும்பப் பெற்றதையடுத்துக் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தென்கிழக்கு லண்டனில் பெல் மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அசாஞ்சேயை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி அமெரிக்கா இங்கிலாந்திடம் கோரிக்கை விடுத்தது. உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஜூலியன் அசாஞ்சேவுக்கு அதிகபட்சமாக 175 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் அமெரிக்காவிடம் தன்னை ஒப்படைக்கக் கூடாது என்றுகூறி லண்டன் நீதிமன்றத்தில் அசாஞ்சே வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம், அசாஞ்சேயை அமெரிக்காவுக்கு நாடு கடத்தினால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும், மன ரீதியில் பிரச்சினைகள் ஏற்பட்டு சிறையில் அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் கூறி அவரை நாடு கடத்த அனுமதிக்க முடியாது என தீர்ப்பளித்தது. நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பை எதிர்த்து லண்டன் மேல்முறையீட்டு நீதி மன்றத்தில் அமெரிக்கா மேன்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் அசாஞ்சேவை நாடுகடத்த அனுமதிக்க முடியாது என ஏற்கனவே வழங்கியிருந்த தீர்ப்பை ரத்துச் செய்து, அசாஞ்சேயை நாடு கடத்தத் தடையில்லை என்று உத்தரவிட்டது. 

Spread the love